அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன்எவ் கென்னடி படுகொலை குறித்த ஆயிரக்கணக்கான கோப்புகளை டிரம்ப் நிர்வாகம் பகிரங்கப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் 35வது ஜனாதிபதியான ஜோன் எவ் கென்னடி 1963ம் ஆண்டு நவம்பர் மாதம் டெக்சாசின் டலஸில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மக்கள் பல வருடங்களாக இந்த ஆவணங்களிற்காக காத்திருந்தனர் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் இதனை பகிரங்கப்படுத்துமாறு தனது அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
டலாஸில் உள்ள டீலிபிளாசா வழியாக ஜோன் எவ் கென்னடியின் வாகனத்தொடரணி சென்றுகொண்டிருந்தவேளை லீ ஹார்வே ஒஸ்வால்ட் என்ற நபர் பாடசாலை நூல்கள் சேமிக்கப்படும் பகுதியொன்றிலிருந்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார்.
இந்த நிலையில் புதிதாக வெளியாகியுள்ள விடயங்கள் காரணமாக ஏற்கனவே உள்ள தகவல்கள் மாற்றமடையுமா என நிபுணர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த படுகொலை குறித்த பல்வேறு சந்தேகங்களை கொண்டுள்ள ஆவணங்களையும் டிரம்ப் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
மக்கள் மத்தியில் பிரபலமான அமெரிக்காவின் இளம் ஜனாதிபதியை கொலை செய்வது குறித்த நோக்கத்துடன் லீ ஹார்வே ஒஸ்வால்ட் ரஸ்யா சென்றார் என்ற சந்தேகங்களை கொண்டுள்ள ஆவணங்களும் டிரம்ப் பகிரங்கப்படுத்தியுள்ளவற்றில்உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பனிப்போரின் ஆரம்பகாலங்கள் குறித்த பாதுகாப்பு திணைக்களத்தின் ஆவணங்களில் இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்காவின் தலையீடுகள்,கியுபா தலைவர் பிடல் கஸ்டிரோ உலகின் ஏனைய கம்யுனிச நாடுகளிற்கு வழங்கிய ஆதரவை முறியடிப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் போன்றவை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.கஸ்டிரோ அமெரிக்காவுடன் யுத்தத்தை ஆரம்பிக்கும் நிலைக்கு செல்லமாட்டார் என தெரிவிக்கும் ஆவணங்களும் பகிரங்கப்படுத்தப்பட்ட ஆவணங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கஸ்டிரோ அமெரிக்காவுடன் யுத்தத்தை ஆரம்பிக்கும் நிலைக்கு செல்லமாட்டார், அவ்வாறு சென்றால்,அது கஸ்டிரோ அரசாங்கத்திற்கு உடனடியாக பெரும் ஆபத்தை கொண்டுவரும் என ஆவணமொன்று தெரிவிக்கின்றது.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றதும் கென்னடி கொலை தொடர்பான ஆவணங்களை பகிரங்கப்படுத்துமாறு டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து கென்னடி படுகொலை தொடர்பில் ஆயிரக்கணக்கான புதிய ஆவணங்களை தேடும்பணியில் எவ்பிஐயினர் ஈடுபட்டனர்.