டயானாவின் குடியுரிமை குறித்த ரிட் மனு : 28 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுக்க தீர்மானம்

0
128

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என்பதால் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலனைக்கு எடுக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (18) தீர்மானித்தது. 

அதன்படி அந்த எழுத்தாணை மனுவை எதிர்வரும் 28 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா, தம்மிக்க கனேபொல ஆகிய நீதிபதிகள் குழாம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.  

அத்துடன் மனுவின் பரிசீலனைகளுக்காக டயானா கமகே உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மனு தொடர்பில் அறிவித்தல் பிறப்பிக்குமாறும் மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக செயற்பாட்டாளரான ஓஷல லக்மால் அனில் ஹேரத் இந்த ரிட்  மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில் மனுவின் பிரதிவாதிகளாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட 15 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

 நேற்றைய தினம் மனுதாரருக்காக சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் மன்றில் ஆஜரான நிலையில்  தாம் கோரியுள்ள சலுகையை வழங்குவது தொடர்பில் அனைத்து தரப்பினர் முன்னிலையிலும் ஆராய்வது பொருத்தமானது என அவர்  தெரிவித்துள்ளார்.

 அதன்பிரகாரம்,  மனுவை எதிர்வரும் 28 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்த மேன் முறையீட்டு நீதிமன்றம்,  அது தொடர்பில் பிரதிவாதிகளுக்கும் அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டது.