டலஸ் அழகபெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரசின் பெரும்பாலான உறுப்பினர்கள் மீண்டும் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைவார்கள். எத்தேர்தலையும் வெற்றிக்கொள்ள தயார் எனவும்,
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
‘முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும தலைமையில் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 13 பேரில் பெரும்பாலானோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைவார்கள். நாட்டில் பிரதான அரசியல் கட்சியாக பொதுஜன பெரமுனவே உள்ளது. கட்சி யாப்பிற்கமைய பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் பொதுஜன பெரமுனவின் தவிசாளராக உள்ளார்.
கட்சி கொள்கைக்கும், தீர்மானத்திற்கு எதிராக இவர் செயற்படுவதால் அவருக்கு எதிராக கட்சி மட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் பொதுஜன பெரமுன வசமுள்ளது.
இருப்பினும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்கினோம். பல்வேறு காரணிகளை குறிப்பிட்டுக்கொண்டு பிரதான எதிர்க்கட்சிகள் சர்வக்கட்சி அரசாங்கத்தின் ஒன்றிணைய மறுப்பு தெரிவித்ததால் இராஜாங்க அமைச்சுக்களை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்.
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அமைச்சரவை அமைச்சு பதவியை கோரவில்லை.
பொதுஜன பெரமுனவை பலப்படுத்தும் வகையிலான திட்டங்களை தேசிய மட்டத்தில் முன்னெடுக்கவுள்ளதால் அவர் அமைச்சு பதவியை கோரவில்லை. எதிர்வரும் நாட்களில் நிலையான அமைச்சரவை ஸ்hதாபிக்கப்படும்.
பொதுஜன பெரமுனவை நாட்டு மக்கள் புறக்கணித்து விட்டதாக குறிப்பிடுவது அடிப்படையற்றதாகும்.
எத்தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம். இனிவரும் காலங்களில் நாட்டு மக்கள் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தையே தோற்றுவிப்பார்கள் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.