டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்திய அணித் தலைவர் ரோஹித் ஷர்மா விடைபெற்றார்!

0
30

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஒய்வுபெறுவதாக இந்திய டெஸ்ட் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, தனது இன்டக்ராம் கணக்கில் பதவிட்டுள்ளார்.

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் புதன்கிழமை (07) இரவு பதற்றம் அதிகரித்துக்கொண்டிருக்க டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் ஷர்மா அறிவித்துள்ளார்.  

அவரது இந்தத் தீர்மானம் ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல.

அவுஸ்திரேலியாவுக்கான டெஸ்ட் தொடர் விஜயத்தில் ரோஹித் ஷர்மா துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியிருந்தார். 

எனினும் அந்தத் தொடர் 1 – 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு தோல்வியில் முடிவடைந்து நான்கு மாதங்கள் கழித்தே ரோஹித் ஷர்மா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

‘அனைவருக்கும் வணக்கம், நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்ற செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது நாட்டை வெள்ளை அங்கியுடன் பிரதிநிதித்துவம் செய்வது பெருங் கௌரவமாகும். கடந்த பல ஆண்டுகளாக நீங்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி கூறுகிறேன்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடுவேன்’ என இன்டக்ராமில் ரோஹித் ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.

போடர் – காவஸ்கர் டெஸ்ட் தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியதால் ரோஹித் ஷர்மா, கடைசிப் போட்டியிலிருந்து தானாகவே விலகிக்கொண்டிருந்தார்.

ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கடந்த வருடம் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற சூட்டோடு சர்வதேச ரி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் ஷர்மா அறிவித்திருந்தார்.

2023 ரி20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்தியாவுக்கு தலைமை வகித்த ரோஹித் ஷர்மா, இந்த வருடம் பாகிஸ்தானினும் துபாயிலும் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை சம்பியனாக வழிநடத்தி இருந்தார்.

இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற்றுள்ள ரோஹித் ஷர்மா, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரம் விளையாடவுள்ளார்.

ஆனால், ஆபிரிக்கக் கண்டத்தில் 2027இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ணம் வரை அவரால் தொடர முடியுமா என்பது சந்தேகமே.

இங்கிலாந்துக்கு எதிராக ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடருக்கான அணித் தலைவர் பதவியை ரோஹித் ஷர்மாவுக்கு கொடுக்க தெரிவாளர்கள் விரும்பவில்லை என்ற தகவல் புதன்கிழமை மாலை கசிய ஆரம்பித்தது.

இதனை அடுத்தே அவர் தனது ஓய்வு குறித்து அறிவித்தார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 2013இல் அறிமுகமான ரோஹித் ஷர்மா, இந்தியாவுக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள், 18 அரைச் சதங்களுடன் 4301 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார். அவரது சராசரி 40.6 ஆகும்.

தனது அறிமுக டெஸ்ட் தொடரில் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரராக 288 ஓட்டங்களை மொத்தமாக குவித்து துடுப்பாட்ட ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார்.

ஆனால் அதன் பின்னர் டெஸ்ட் அணியில் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள ரோஹித் ஷர்மா கடுமையாக போராட வேண்டி இருந்தது.

எனினும் 2019இல் ஆரம்ப வீரர் ஸ்தானத்தை நிரப்ப வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளான ரோஹித் ஷர்மா அதன் பின்னர் அணியில் நிலையான இடத்தைப் பிடித்துக்கொண்டார்.

2021, 2023 ஆகிய வருடங்களில் நடைபெற்ற இரண்டு ஐசிசி டெஸ்ட் சம்பயின்ஷிப் இறுதிப் போட்டிகளில் விளையாடிய பெருமைக்குரிய ரோஹித் ஷர்மா, அவுஸ்திரேலியாவை அந்த சொந்த மண்ணில் 2021இல் இந்தியா ஈட்டிய வரலாற்று முக்கியம்வாய்ந்த வெற்றியிலும் பங்களிப்பு செய்திருந்தார்.