மீரிகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்ட பின்னர் அவரது சடலத்தை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது குறித்த சடலம் வத்துபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் மரணத்தில் உறவினர்கள் சந்தேகம் எழுப்பியதையடுத்தே சடலத்தை மேலதிக விசாரணைகளுக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாக மீரிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மீரிகம பிரதேசத்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் வசித்து வந்த 81 வயதான பெண்ணின் சடலமே இவ்வாறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
வெயாங்கொட பிரதேசத்தில் வசிப்பவர் எனக் கூறப்படும் இந்த பெண் சுமார் ஆறு ஏழு மாதங்களுக்கு முன்னர் அவரது நெருங்கிய உறவினரால் முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கிருந்தபோது குறித்த பெண், சுகவீனமடைந்ததையடுத்து மீரிகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் நிமோனியா காய்ச்சலே அவரது மரணத்துக்கு காரணம் எனவும் வைத்தியர் தெரிவித்ததிருந்தமை குறிப்பிடத்தக்கது.