தபால் மூல வாக்குச் சீட்டுக்களை அச்சிடத் தயார் – அரசாங்க அச்சக பிரதானி

0
269

வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு செலவாகும் தொகையை பிறகு தருவதாக தேர்தல் ஆணைக்குழு எழுத்துமூலம் வழங்கிய வாக்குறுதிக்கமைய தபால் மூல வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு தயார். 

என்றாலும் பொலிஸ் பாதுகாப்பு வழங்காததால் அந்த நடவடிக்கையை இதுவரை ஆரம்பிக்க முடியாமல் இருக்கிறது என அரசாங்க அச்சக பிரதானி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தபால் மூல வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு செலவாகும் தொகையை பிறகு தருவதாக தேர்தல் ஆணைக்குழு எழுத்துமூலம் வழங்கிய வாக்குறுதிக்கமைய  வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு தயாராக இருக்கிறோம். என்றாலும் வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான பொலிஸ் பாதுகாப்பு வழங்காததால் அந்த நடவடிக்கையை இதுவரை ஆரம்பிக்க முடியாமல் இருக்கிறது. 

வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்காக பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு தெரிவித்து பொலிஸ் மா அதிபர் உட்பட குறித்த பிரிவுகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி 4 கடிதங்கள் இதுவரை அனுப்பி இருக்கிறோம். 

அத்துடன் வாக்குச்சீட்டுக்களை பொலிஸ் பாதுகாப்பு இல்லாமல் இதுவரை அச்சிட்டுவந்தமை தொடர்பாக ஊழியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதால், குறித்த வாக்குச்சீட்டுக்களை மீள எண்ணி உறுதிப்படுத்த வேண்டி இருகிறது என்றார்.

இதேவேளை, 12 மாவட்டங்களுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிட்டு முடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகம் அறிவித்துள்ளது.