தமிழ்த் தேசிய கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?

0
177

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வு தொடர்பில் அனைத்து கட்சிகளுடன் பேசவிருப்பதாக அறிவித்திருக்கின்றார்.
அரசியல் தீர்வு முயற்சிக்கு தாம் ஆதரவளிப்பதாக மகிந்த ராஜபக்ஷவும் பாராளுமன்றத்தில் உறுதியளித்திருக்கின்றார்.
இதேபோன்று, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கின்றார்.
இந்த பின்புலத்தில் அடுத்த மாதம் அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் ரணில் விக்கிரமசிங்க அழைக்கவிருக்கின்றார்.
ஆரம்பத்தில், வடக்கு மக்களின் பிரச்னைகள் தொடர்பில் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசவுள்ளாரெனக் கூறியிருந்த ரணில், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்கின்றார்.
ஒருவேளை, புதுடில்லிக்கு செல்லும்போது ஒரு தெளிவான செய்தியொன்றுடன் செல்வதற்கு அவர் முயற்சிக்கலாம்.
இவ்வாறானதொரு பின்புலத்தில், தமிழ்த் தேசிய கட்சிகள் என்ன செய்யப்போகின்றன? இந்த விடயத்தை எவ்வாறு அணுகப் போகின்றன? சமஷ்டி
அடிப்படையில் மட்டும்தான் பேசுவோமென்று அடம்பிடிக்கப் போகின்றனவா அல்லது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு இன்றைய சூழலுக்கு ஏற்றவாறான
அணுகுமுறைகளை கைக்கொள்ளப் போகின்றனவா? ஏனெனில், வழமையான சுலோகங்களுடன் அரசியல் தீர்வு முயற்சிகளை அணுகினால் விடயங்கள் ரணில்
விக்கிரமசிங்கவுக்கே சாதகமாகும்.
ஏனெனில், நான் முயற்சித்தேன் ஆனால், தமிழ் கட்சிகள் தனக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்புகளை வழங்கவில்லையென்று கூறிவிட்டு சாதாரணமாக இதனை கடந்துசெல்வார்.
ஏனெனில், தமிழ்த் தேசிய கட்சிகள் என்னதான் சமஷ்டி தொடர்பில் பேசினாலும்கூட, அதற்கான நியாயங்கள் தொடர்பில் வலியுறுத்தினாலும்கூட, சமஷ்டிக்கான வெளி ஆதரவு சிறியளவில்கூட இல்லை.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் வலியுறுத்திவரும் ஒரேயொரு நாடான இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வடக்கு – கிழக்கில் வரலாற்றுரீதியாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தியதில்லை.
தமிழ் மக்கள் கௌரவமாக நடத்தப்படக் கூடியதோர் அரசியல் தீர்வு தொடர்பிலேயே இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.
அதற்கான அடிப்படையாக 13ஆவது திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றது.
இந்த பின்புலத்தில் நோக்கினால் சமஷ்டி கோரிக்கைக்கு சிங்களவர்கள் மத்தியிலும் ஆதரவில்லை.
அதேவேளை, வெளித் தரப்புக்கள் மத்தியிலும் ஆதரவில்லை.
ஒருவேளை, சிங்களவர்கள் எதிர்க்கும் ஒன்றை இந்தியா ஆதரிக்குமானால் இந்தியாவின் ஆதரவுடன் தமிழர்கள் அதற்காக போராடலாம்.
ஆனால், அதற்கான வாய்ப்பும் இப்போதில்லை.
தற்போது அரசியல் தீர்வுக்கு ஆதரவாக பேசும் அனைத்து சிங்கள அரசியல்வாதிகளும் ஒற்றையாட்சி முறைமையை இல்லாதொழிப்பதை ஆதரிக்கப்போவதில்லை.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்னைகளுக்கு தனது ஆட்சியில் தீர்வு காண்பதாகக் கூறும் சஜித் பிரேமதாஸ எந்தவொரு சந்தர்ப்பத்திலும்
ஒற்றையாட்சியை நீக்குவதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.
அவரால் அவ்வாறு கூறவும் முடியாது.
இந்தப் பின்புலத்தில் ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வு விவகாரத்தை தந்திரோபாயமாக அனைத்து கட்சிகளினதும் கூட்டுப்பொறுப்பாக மாற்ற முயற்சிக்கின்றார்.
தமிழ்த் தேசிய கட்சிகள் இதனை தந்திரோபாயமாக அணுகினால் மட்டுமே, இன்றைய சூழலை கையாள முடியும் – அதேவேளை, இந்தியாவின் ஆதரவையும் பெறமுடியும்.
சமஷ்டியை ஓர் இறுதியான இலக்காக வைத்திருப்பதில் தவறில்லை – ஏனெனில், 1949இலிருந்து நாம் அந்தக் கோரிக்கையை முன்வைத்து வருகின்றோம். ஆனால், இன்றுள்ள சாதகமான சூழலை உச்சபட்சமாக பயன்படுத்திக்கொள்வதற்கு, முதலில் அரசமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் கோரிக்கை ஒன்றே தமிழர்களுக்கு சாதகமானதொரு விடயமாக இருக்கின்றது.
அந்த விடயத்துக்குத்தான் இந்தியாவின் ஆதரவு உண்டு.
இதில் எவ்வாறான ஏற்பாடுகள் உள்வாங்கப்பட வேண்டுமென்பது தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசுவதுதான் காலத்துக்கு சரியானதாகும்.
எனவே, நிபந்தனைகளின் அடிப்படையில் இன்றைய சூழலை தமிழ் கட்சிகள் அணுக முடியாது.
அவ்வாறாக அணுகினால் தமிழர்களுக்கு சாதகமாக தெரியும் அனைத்துமே ரணிலுக்கான வாய்ப்பாக மாறிவிடும்.
ரணில் – மைத்திரி ஆட்சிக்காலத்தின் அனுபவங்களிலிருந்தே ரணில் சிந்திக்கின்றார்.
ஏனெனில் அன்று, புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் மட்டும் தோல்வியடையவில்லை.
மாறாக, ரணில் விக்கிரமசிங்கவின் செல்வாக்கும் வீழ்ச்சியுற்றது.
இதன் காரணமாகவே, அரசியல் தீர்வு விவகாரத்தை ரணில் அனைவரதும் கூட்டுப்பொறுப்பாக மாற்ற முயற்சிக்கின்றார்.
முயற்சி வெற்றியடைந்தால் ரணிலின் அரசியல் செல்வாக்கு மேலும் உயரும்.
ஒருவேளை, தோல்வியேற்பட்டால் அதற்கு ரணில் பொறுப்பல்ல.
ரணிலின் தந்திரேபாயத்துக்குள் சிக்காதிருக்க வேண்டுமானால், இந்தியா ஆதரிக்கும் ஒன்றை மட்டுமே தமிழ்த் தேசிய கட்சிகள் கையிலெடுக்க வேண்டும். இதற்கு மாறாக செயல்பட்டால் மீண்டுமொரு வாய்ப்பு கைநழுவுவது நிச்சயம்.