கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (03) நடைபெற்ற 5ஆவது லங்கா பிறீமியர் லீக்கின் 4ஆவது போட்டியில் தம்புள்ள சிக்சர்ஸ் அணியை 4 விக்கெட்களால் முன்னாள் சம்பியன் ஜெவ்னா கிங்ஸ் வெற்றிகொண்டது.கடைசிக் கட்டத்தில் மிகவும் விறுவிறுப்பை ஏற்படுத்திய அப் போட்டியில் கடைசிப் பந்திலேயே ஜெவ்னா கிங்ஸ் வெற்றிபெற்றது.
தம்புள்ள சிக்ஸர்ஸ் சார்பாக குசல் ஜனித் பெரேரா சதம் குவித்து அசத்திய போதிலும் அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலன்க ஆகியோரின் அரைச் சதங்கள் அதனை வீணடிக்கச் செய்து ஜெவ்னா கிங்ஸை வெற்றிபெற உதவின.அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள சிக்சர்ஸ் 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 191 ஓட்டங்களைக் குவித்தது. குசல் ஜனித் பெரேரா அபாரமாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் சதம் குவித்தார்.
இதன் மூலம் ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் அத்தியாயத்தில் முதலாவது சதத்தைக் குவித்த பெருமை குசல் பெரேராவை சார்ந்தது,ஆரம்ப வீரர் தனுஷ்க குணதிலக்க 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோது தம்புள்ள சிக்சர்ஸின் மொத்த எண்ணிக்கை 18 ஓட்டங்களாக இருந்தது.ஆனால், குசல் பெரேரா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி நுவனிது பெர்னாண்டோவுடன் 2ஆவது விக்கெட்டில் 108 ஓட்டங்களையும் மார்க் சப்மனுடன் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
குசல் பெரேரா 52 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 102 ஒட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். நுவ்னிது பெர்னாண்டோ 40 ஓட்டங்களையம் மார்க் சப்மன் ஆட்டம் இழக்காமல் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.192 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
முந்தைய போட்டியில் போன்றே இன்றைய போட்டியிலும் ஜெவ்னா கிங்ஸின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.குசல் மெண்டிஸ் (6), பெத்தும் நிஸ்ஸன்க (27), ரைலி ரூசோவ் (1) ஆகிய மூவரும் ஆட்டம் இழக்க முன்னாள் சம்பியன் ஜெவ்னா கிங்ஸ் பெரும் அழுத்தத்தை எதர்கொண்டது. (36 -3 விக்.)எனினும், அவிஷ்க பெர்னாண்டோவும் அணித் தலைவர் சரித் அசலன்கவும் 4ஆவது விக்கெட்டில் 134 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால், அவர்கள் இருவரும் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.
சரித் அசலன்க 50 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்னாண்டோ 80 ஓட்டங்களையும் பெற்றனர்.அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் தனஞ்சய டி சில்வா 9 ஓட்டங்களுடன் வெளியேறினார்.எனினும், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் (4 ஆ.இ.), பேபியன் (11 ஆ.இ.) ஆகிய இருவரும் வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 10 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர். பந்துவீச்சில் முஸ்தாபிஸுர் ரஹ்மான் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நுவன் துஷார 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.