இலங்கை வங்கி மாவத்தைக்குள் உள்நுழைய முயற்சித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு காலிமுகத்திடலில் கோட்டா கோ கம போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 50 நாட்களாகின்ற நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டப் பேரணியானது கொள்ளுப்பிட்டியிலிருந்து கொழும்பு காலிமுகத்திடல் வரை முன்னெடுக்கப்பட்டது.
கோட்டா வீட்டுக்கு போ, ரணில்- கோட்டா கூட்டுச்சதியை தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த மாபெறும் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்தன.
இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும்வரை போராட்டம் தொடரும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேரர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினரும் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு கொள்ளுப்பிட்டி முதல் காலிமுகத்திடல் வரையான வீதியின் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல வீதிகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டது.
அதனடிப்படையில் யோர்க் வீதி, பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி உட்பட சில வீதிகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.