மாண்புமிகு மலையக எழுச்சி பயணத்தின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் தலைமன்னாரில் இடம்பெற்றது.வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட மாண்புமிகு மலையக எழுச்சி பயணத்தின், ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வு தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் இடம்பெற்றது.இதன்போது புனித லோரன்சியார் ஆலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

மாண்புமிகு மலையக சிவில் சமூக கூட்டிணைவு அமைப்பின் ஏற்பாட்டில் சுமார் 50க்கும் மேற்பட்ட மலையக மக்கள், தலைமன்னாருக்கு வருகை தந்து குறித்த திருப்பலியில் கலந்து கொண்டு தமது முன்னோர்களுக்கான நினைவு கூறல் மற்றும் ஓராண்டு பூர்த்தி நன்றியையும் செலுத்தினர்.

திருப்பலியின் பின்னர் மலையக மக்கள் மற்றும் தலைமன்னார் ஊர்மனை கிராம மக்கள் ஊர்வலமாக சென்,று குறித்த கிராமத்தின் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மலையக மக்களின் ஞாபகார்த்த நினைவுத்தூபி இடத்தில் விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து குறித்த குழுவினர் மன்னார் நகர பகுதிக்கு விஜயம் செய்து கடந்து வந்த பாதை பற்றிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது மாண்புமிகு மலையக எழுச்சி பயணத்தின் போது ஆதரவு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் நற்சான்று பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மலையக மக்கள், மலையக மக்கள் பிரதிநிதிகள், கிராமவாசிகள், மதகுரு, அருட்சகோதரி, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.