பொலிஸ்மா அதிபர் டீ.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை 2002ஆம் ஆண்டின் 5ஆம்இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17ஆம் வாசகத்தின் பிரகாரம் அப்பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதத்தை ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய ஓகஸ்ட் மாதம் 5, 6 மற்றும் 7ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடவுள்ளது. ஓகஸ்ட் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை போயாதினம் என்பதால் அன்று பாராளுமன்றம் கூடாது.
அதற்கமைய, ஓகஸ்ட் 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 10 மணி முதல் 11 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 11 மணி முதல் 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் 11.30 மணி முதல் மாலை 4 மணிவரை பொலிஸ்மா அதிபர்டீ.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை 2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்கஅலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17ஆம் வாசகத்தின் பிரகாரம் அப்பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதத்திற்காகநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 4 மணிக்கு இதற்கான வாக்கெடுப்பை நடத்தவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
ஐஜிபி தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணை தற்போது பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளது. ஐந்து முழு நாட்கள் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்ட பின்னர் இந்த பிரேரணை பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படும் என்று பாராளுமன்ற செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், விவாதம் நடைபெறும் நாளில் ஆளும் கட்சி எம்.பி.க்கள் கொழும்பில் இருக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த பிரேரணை நிறைவேற்றப்பட, சமூகமளிக்காதவர்கள் உட்பட அனைத்து எம்.பி.க்களில் 113 பேர் போதுமானதாக இருக்கும். பாராளுமன்றத்தின் அமைப்பைக் கருத்தில் கொண்டு, இந்த பிரேரணை நிச்சயமாக நிறைவேற்றப்படும்.
பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்த பிறகு, அரசியலமைப்பு சபைக்கு ஐஜிபி பதவிக்கான பெயரை ஜனாதிபதி பரிந்துரைப்பார்.