தென்னாபிரிக்க உதவி?

0
151

இனப்பிரச்னையை தீர்ப்பதற்கு தென்னாபிரிக்காவிடமிருந்து உதவிகளை பெறவுள்ளதாகவும், தென்னாபிரிக்க அனுபவத்தின் அடிப்படையில் செயல் குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாகவும் வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருக்கின்றார்.
பல வெளிநாட்டு அமைச்சர்கள் காலத்திற்கு காலம் கூறிய பல கதைகளை தமிழ் மக்கள் கேட்டுவிட்டனர்.
இப்போது அலி சப்ரி புதியதொரு கதையை கூறியிருக்கின்றார்.
தென்னாபிரிக்க கதை முன்னரும் சிலரால் கூறப்பட்ட கதைதான்.
ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில், அரசுசாரா நிறுவனங்களின் தாராளமான நிதியின் கீழ் தென்னாபிரிக்க சுற்றுப்பயணங்கள் பலவும் இடம்பெற்றிருக்கின்றன.
இதில் பங்குகொண்டு, சுற்றுலாக்களை அனுபவித்த தமிழர்களும் இருக்கின்றனர்.
யுத்தம் நிறைவுற்று 13 வருடங்கள் முடிந்துவிட்டது.
இந்த 13 வருடங்களில் நல்லிணக்கம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் எவையுமே வெற்றிபெறவில்லை.
இனியும் வெற்றிபெறுமா என்பது சந்தேகமே! ஏனெனில் நல்லிணக்க முயற்சிகளுக்கான அடிப்படை அரசியல் தீர்வாகும்.
அரசியல் தீர்வின்றி, ஒருபோதுமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.
இந்த பின்புலத்தில் நோக்கினால், கடந்த 13 வருடங்களாக நல்லிணக்கம் தொடர்பில் பேசியவர்கள் அனைவருமே தோல்வியடைந்திருக்கின்றனர்.
அரசு சாரா நிறுவனங்களும், நல்லிணக்கம் தொடர்பில் பேசும் கொழும்பு சிவில் சமூக அமைப்புக்களை சேர்ந்தவர்களும் நல்லிணக்கம் என்பதன் அடிப்படையை தெளிவாக புரிந்துகொண்டிருப்பதாக தெரியவில்லை.
தென்னாபிரிக்க அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள முடியுமா? அந்த அனுபவங்களை இலங்கையின் இனப்பிரச்னையை தீர்க்கும் முயற்சிகளுக்கு பயன்படுத்த முடியுமா? இந்த இரண்டு கேள்விகளுக்குமான பதில் இலையென்பதுதான்.
ஏனெனில், தென்னாபிரிக்க அனுபவம் என்பது அடிப்படையிலேயே மாறுபட்டது.
தென்னாபிரிக்காவில் ஒடுக்குமுறைக்குள்ளான தரப்பு கறுப்பின பெரும்பான்மை மக்களாவர்.
எண்ணிக்கையில் சிறுபான்மையான வெள்ளையின மக்களே அரசியலில் மேலாதிக்கம் பெற்றவர்களாக இருந்தனர்.
அவர்களை எதிர்த்தே கறுப்பின மக்கள் போராடினர்.
தவிர, தென்னாபிரிக்க மக்கள் கிறிஸ்தவர்கள்.
அங்கு அரசியலில் மதம் ஒரு மேலாதிக்கமாக தொழில்படவில்லை.
இலங்கையில் இவைகள் தலைகீழாக இருக்கின்றன.
அரசியலமைப்பில் இருக்கின்ற விடயங்களையே தமிழ்மக்களுக்கு அதிகமென்று கூறும் சிங்கள – பௌத்த மேலாதிக்கம், தென்னிலங்கை அரசியலில் புரையோடிப் போயுள்ள சூழலில், தென்னாபிரிக்க அனுபவங்களை எவ்வாறு இலங்கைத் தீவின்
நல்லிணக்கத்திற்கு பயன்படுத்த முடியும்? இலங்கையின் இனப்பிரச்னையை தீர்ப்பதிலுள்ள அடிப்படையான பிரச்சினை, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பலவீனமான தரப்பாக இருக்கின்றனர்.
சிங்கள ஆளும்வர்க்கம் யுத்த வெற்றியுடன் விடயங்களை அணுகுகின்றன.
இந்த நிலையில் பலமான சிங்களவர்களும் பலவீனமான தமிழர்களும் எவ்வாறு நல்லிணக்க பொறிமுறையொன்றுக்குள் உடன்படுவது? இலங்iயின் நல்லிணக்க வாதத்திலுள்ள அடிப்படையான சவால் இதுதான்.
இந்த சவாலை வெற்றிகொள்ள முடியாமையால்தான், கடந்த 13 வருடகால நல்லிணக்க முயற்சிகள் பூச்சியத்திலேயே இருக்கின்றன.