தென்னிலங்கை கட்சிகள் வடக்கு, கிழக்கில் ஆட்சி அமைப்பது சிரமம் – சிறிநேசன்!

0
13

பெரும்பாலும் வடக்கு, கிழக்கில் தென்னிலங்கை சார்ந்த கட்சிகள் ஆட்சி அமைப்பது என்பது சிரமமான விடயம். ஏனெனில், அவர்களுடைய பெரும்பான்மை என்பது பெரும்பான்மை இனத்தவர்கள் என்ற அடிப்படையில் அது தென்னிலங்கையிலேயே சாத்தியமாகும். என்றாலும் அது வடக்கு, கிழக்கில் சாத்தியம் இல்லை. ஏனெனில், தென்னிலங்கை சார்ந்த கட்சிகள் சமத்துவம் பேசினாலும் சமத்துவ அடிப்படையில் தீர்வுகளை காண்பதற்கு முன்வரவில்லை என்பதை கடந்த ஆறு மாத காலத்துக்குள் மக்கள் விளங்கிக்கொண்டிருக்கின்றார்கள் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் புதன்கிழமை (14) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 

தற்போதைய சில சூழ்நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுற்ற நிலையில் சபைகளை அமைக்கின்ற செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. 

இந்நிலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரதிநிதித்துவ முறை என்பது ஒரு சிக்கலான பிரதிநிதித்துவ முறையாகும். இதன் ஊடாக வட்டாரத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள், பட்டியல் மூலமாக வெற்றி பெற்ற உறுப்பினர்கள், தொங்கு நிலை ஆசனங்கள் பெற்றவர்கள் என மூன்று வகையான உறுப்பினர்கள் பல சபைகளில் இடம்பெற்றுள்ளனர். 

ஆளுங்கட்சியாக இருந்தாலென்ன, அல்லது எதிர்க்கட்சிகளாக இருந்தாலென்ன… எல்லா கட்சிகளுக்கும் சபைகளை அமைக்கின்ற விடயத்தில் சிரமங்கள், சிக்கல்கள், காணப்படுகின்றன. எனவே, மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் இலங்கை தமிழ் அரசிக் கட்சியை பொறுத்தளவில் கணிசமான ஆசனங்களை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியிருக்கிறது.

இந்த நிலையிலும் மூன்று வகையான நிலைமை காணப்படுகின்றன. முதலாவது தனித்து நின்று ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. ஓரிரு ஆசனங்களை மேலும் பெற்று ஆட்சி அமைக்கக்கூடிய நிலைமை காணப்படுகிறது. இன்னும் சில சபைகளை அமைப்பதில் சவாலாகவும் காணப்படுகிறது. 

எமது கட்சியில் பலர் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு விண்ணப்பித்திருந்தார்கள். அவ்வாறு விண்ணப்பித்தும் பலருக்கு போட்டியிட முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கலாம். அவ்வாறானவர்கள் உங்களுடைய பலத்தை காட்டுவதற்காக பலர் போட்டியிட்டு தமிழ் தேசிய உணர்வோடு வெற்றி பெற்றிருக்கலாம். அவர்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்வது யாதெனில், கடந்த காலத்தில் வேட்பாளர் தெரிவில் சில தவறுகள் நடந்திருக்கலாம். எனவே, நீங்கள் தமிழ் தேசிய உணர்வு மிக்கவர்கள். சற்று விலகியிருந்தாலும் உங்கள் தாய்க்கட்சியான இலங்கை தமிழரசு கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதை நான் கேட்டுக்கொள்கிறேன்.

அதுபோல் தமிழ்த் தேசியப் பரப்பில் தமிழ் தேசியக் கொள்கையோடு ஒத்த கொள்கையாகப் பயணிக்கின்ற கட்சிகளும் இருக்கின்றன. அக்கட்சிகள் கூட சில ஆசனங்களை பெற்றிருக்கின்றன. அக்கட்சிகளும் வேறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை இல்லை. அவ்வாறான கட்சிகளும் கூட தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நாங்கள் உருவாக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டம் என்பது பல்லின சமூகத்தை கொண்ட மாவட்டமாகும். நாம்  கடந்த காலத்தில் கூட முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைத்திருந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரும் தெரிவித்திருந்தனர். 

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்களும் கூட இதனை வெளிப்படுத்தியிருந்தார். அவர்களுக்கு தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில் அவர்களுக்கும் ஆட்சி அமைப்பதற்கு எமது உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஒருசில சபைகளில் நாங்களும் ஆட்சி அமைப்பதற்கு அவர்களுடைய ஆதரவு தேவைப்படுகிறது. இது எந்தக் கட்சியாக இருந்தாலும் இவ்வாறான ஒரு நிலைமை காணப்படுகிறது.

எனவே, எந்தவொரு நிலையிலும் நாங்கள் அடம் பிடித்துக்கொண்டு நிற்க முடியாத நிலைமை காணப்படுகிறது. கடந்த காலத்தில் கூட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா அவர்களும் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

பரஸ்பரம் முஸ்லிம் மக்கள் அதிகம் வாழ்கின்ற பிரதேசங்களில் சபைகளை அமைப்பதற்கு தமிழ் கட்சிகளின் உதவிகளை அவர்கள் நாடுகின்றார்கள். தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற ஒரு சில சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு முஸ்லிம் உறுப்பினர்களின் ஆதரவு வேண்டப்படுகின்ற காரணத்தினால் இதனை விமர்சனம் செய்து பெரிதுபடுத்த வேண்டியதில்லை. 

எனவே, தமிழ் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஆட்சி அமைக்கலாம். அதேபோன்று பரஸ்பர ஒத்துழைப்பை வழங்கக்கூடிய விதத்தில் தமிழ் பேசுகின்ற கட்சிகள் என்ற அடிப்படையில் இணையக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கிடையில் நாம் பதவிகளுக்காக நம்மிடையே போட்டியிட்டுக் கொண்டிருக்காமல் விட்டுக்கொடுப்புகள் மூலமாக சபைகளை அமைக்கக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளன.

அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று சபைகளை முஸ்லிம் மக்கள் அமைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. ஏனைய ஒன்பது சபைகளையும் தமிழ் மக்கள் சார்ந்த தமிழ் தேசியக் கட்சிகள் சபைகளை அமைப்பதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன. 

எனவே, இதனை வாதப் பொருளாகவோ, விதண்டாவாதங்களாகவோ மாற்றாமல் நடைமுறை சாத்தியத்தின் அடிப்படையில் இந்த சபைகளை அமைப்பதற்கு நாம் முன்வரவேண்டும் என்பதை நான் பகிரங்க வேண்டுகோளாக விடுக்கின்றேன்.

தேர்தல் காலத்தில் விவாதங்கள் அல்லது தர்க்கங்கள் நடைபெற்றிருக்கலாம். அதன்போது கருத்துப் பரிமாற்றங்கள் இரு பக்கங்களும் நடந்திருக்கலாம். ஆனால், தற்போது தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் சபைகளை அமைக்க வேண்டிய தேவை இருக்கிறது. வாக்களித்த மக்களுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. எனவே சபைகளை அமைக்கின்ற விடயத்தில் பரஸ்பர விட்டுக்கொடுப்பு வேண்டும்.

அதிகபட்சமான ஆசனங்களை பெற்ற கட்சிகளுக்கு சபைகளை அமைப்பதற்குரிய யோக்கியம் இருக்கிறது என்பது எனது கருத்து. இந்நிலையில் சபைகளை அமைக்கின்ற விடயத்தில் தவறான நடைமுறைகளை பின்பற்றுவோர் கௌரவ உறுப்பினர்களை பணத்தினால் பரிமாற்றம் செய்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது. அது உங்களுடைய கௌரவ உறுப்பினர்களை மலினப்படுத்துகின்ற ஒரு செயற்பாடாகவே  அமையும். அது ஒரு மோசடியான செயற்பாடு. அவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக கைவிட வேண்டும். 

பெரும்பாலும் வடக்கு, கிழக்கில் தென்னிலங்கை சார்ந்த கட்சிகள் ஆட்சி அமைப்பது என்பது சிரமமான விடயம். ஏனெனில், அவர்களுடைய பெரும்பான்மை என்பது பெரும்பான்மை இனத்தவர்கள் என்ற அடிப்படையில் அது தென்னிலங்கையிலேயே சாத்தியம். என்றாலும் அது வடக்கு, கிழக்கில் சாத்தியம் இல்லை. ஏனெனில், தென்னிலங்கை சார்ந்த கட்சிகள் சமத்துவம் பேசினாலும் சமத்துவ அடிப்படையில் தீர்வு காண முன்வரவில்லை என்பதை கடந்த ஆறு மாத காலத்துக்குள் மக்கள் விளங்கிக்கொண்டுள்ளனர்.

புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, பெருந்தன்மை என்ற அடிப்படையில் சபைகளை அமைக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதனை கருத்திற்கொண்டு எமது கௌர உறுப்பினர்கள் தங்களுடைய கௌரவத்தை தாழ்த்திக்கொள்ளாமல் முன்வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்றார்.