தேங்காய் எண்ணெய் இறக்குமதி தொடர்பில் 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டு பாதுகாப்பான தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி வெளியிடப்படும்.
இதன்மூலம், பாம் எண்ணெய் இறக்குமதியை ஊக்குவிப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
சர்ச்கைக்குரிய தேங்காய் எண்ணெய் விவகாரம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயன பதார்த்தம் கலக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்பது பல்வேறு பரிசோதனைகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதான மூன்று தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்த தேங்காய் எண்ணெயில் இரசாயன பதார்த்தம் கலக்கப்பட்டுள்ளன என்பதை அரசாங்கமே வெளிப்படுத்தியது. இவ்விடயத்தில் இரகசிய தன்மையினை பேண வேண்டிய தேவை ஏதும் கிடையாது.
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை மீள் ஏற்றுமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கான நடவடிக்கைகளை சுங்க திணைக்களம் மேற்கொண்டுள்ளது. தேங்கய் எண்ணெய் இறக்குமதி தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் 2016 ஆம் திகதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வித கலப்படமும் இல்லாத பாதுகாப்பான தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ய புதிய வர்த்தமானி வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாம் எண்ணெய் பாவனையை ஊக்குவிப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல. இந்த எண்ணெய் தயாரிப்பு சுற்றாடலுக்கும், மனித உடல் ஆரோக்கியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
வேறு தேவைகளுக்காக பாம் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகின்றது. இறக்குமதியை மட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக அதற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தை காட்டிலும் தற்போது பாம் எண்ணெய் இறக்குமதி பெருமளவில் குறைவடைந்துள்ளது என்றார்.