தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம்?

0
75

மிகக்குறுகிய காலத்தில் இன்னொரு தேர்தல். எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும்கூட, மிகவும் குறுகிய காலத்தில் ஒரு தேர்தலை எதிர்கொள்ளக்கூடிய நிலையில் தமிழர் தரப்புகள் இருக்கின்றனவா? அவ்வாறு இருந்தாலும்கூட எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றன? ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி பெரும்பாலான கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட்டிருந்தன. இந்த செயல் தொடருமா -தொடருமென்றால் எவ்வாறு தொடரும்?

தமிழ் மக்களிடம் எஞ்சியிருப்பது சில எண்ணிக்கையான பிரதிநிதித்துவங்கள் மட்டும்தான். அதனையாவது பாதுகாப்பார்களா குறிப்பாக, கிழக்கு மாகாண நிலைமை மிகவும் சிக்கலானது. கிழக்கு மாகாணத்தில் தங்களுக்குள் மல்லுக்கட்டினால் நிச்சயம் தமிழ் பிரதிநிதித்துவங்களை இழக்க நேரிடும். ஏற்கனவே, அம்பாறை இழந்துவிட்டது. இந்தத் தேர்தலில் திருகோணமலையும் பிரதிநிதித்துவத்தை இழக்கப் போகின்றது? அதற்கான வாய்ப்பு மிகவும் பிரகாசமாகவே இருக்கின்றது. இதனைத் தடுக்கும் நோக்கில் எவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபட்டுச் செயல்படப் போகின்றன?

இலங்கைத் தமிழ் அரசு கட்சி நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றது? இவ்வாறானதொரு சூழலுக்குள்தான் தேர்தல் நடைபெறவுள்ளது. ஒருவரை யொருவர் அதிகம் வெட்டியோடும் – வீழ்த்துவதற்கு வாய்ப்பைத் தேடும் கட்சியாக தமிழ் அரசுக் கட்சி மாறியிருக்கின்றது. இந்த நிலையில், தமிழ் அரசுக் கட்சியால் எவ்வாறு தேர்தலை முன்னரைப் போல் எதிர்கொள்ள முடியும் என்னும் கேள்வியுண்டு. அடுத்தது, ஏனைய கட்சிகள் எவ்வாறு தேர்தலை எதிர்கொள்ளப் போகின்றன? தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பாக எதிர்கொள்ளப் போகின்றனவா அல்லது ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்பதுபோல் பிரிந்து அலையப் போகின்றனவா? இந்த இரண்டு கேள்விகளுக்குமான பதிலில்தான் தமிழ் மக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுமா அல்லது சிதைக்கப்படுமா என்னும் கேள்விக்கான பதில் உண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்த காலத்தில் வெற்றி பெற்றவர்கள் முதன்முதலாக பிரிந்து தேர்தலை எதிர்கொள்ளப்போகின்றனர்? ஒவ்வொருவரின் பலமும் பலவீனமும் இனித்தான் தெரியப் போகின்றன? ஓர் அரசியல் கூட்டின்றி தேர்தலை எந்தவொரு கட்சியும் தனித்து எதிர்கொள்ள முடியாது. இந்த யதார்த்தத்தை புறம்தள்ளிச் செயல்பட்டால் நிச்சயம் தோல்விதான். கட்சிகள் தோல்வியடைவது இங்கு பிரச்னையில்லை. ஆனால், கட்சிகளின் தோல்வியால் மக்கள் தோற்றுக் கொண்டே இருக்கின்றனர். மக்கள் ஒருவேளை இதனை உணராமலும் இருக்கலாம். ஆனால், அரசியல் பிரதிநிதித்துவத்தை இழந்து போகும்போது, இறுதியில் மக்கள் அடையாளத்தையே இழந்து போவர். இதுதான் நடக்கப் போகின்றது.

மக்களின் இன்றைய நிலைக்கு வெறுமனே சிங்கள ஆட்சியாளர்கள் மீது மட்டும் குற்றஞ்சாட்டிவிட்டு போவற்கு அரசியல் கட்சிகள் தேவையில்லை. மாறாக, இன்றைய சூழலை எவ்வாறு மாற்றியமைப்பது. அதற்காக எவ்வாறு அர்ப்பணிப்புடன் செயலாற்றுவது என்பதே முதன்மையானது. ஆனால், தன்முனைப்பு வாதங்களாலும் பதவி மோகத்தாலும் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் என்போர் திருந்த வாய்ப்பு உண்டா? இந்தக் கேள்விக்கான பதிலில்தான் நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கப்படப் போகின்றன?