சஜித் பிரேமதாஸ வடக்கு வருகையின்போது அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பேசியிருக்கிறார் – அத்துடன் மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பிலும் பேசியிருக்கின்றார். 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் விடயம் நீண்டகாலமாக பேசப்பட்டுவரும் ஒரு விடயம். மகிந்த ராஜ பக்ஷ அதனை தாண்டிச் செல்வதாக குறிப்பிட்டார். ஆனால்இ எதுவும் நடைபெறவில்லை. 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் மைத்திரி – ரணில் கூட்டணியின் கீழ் புதிய அரசியல் யாப்பு ஒன்றைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அது தொடர்பில் சம்பந்தன் அணி அளவுக்கு அதிகமான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தது. தமிழ் கட்சிகள் ‘ஏக்கிய ராஜ்ய’ என்னும் சொல்லுடன் மல்லுக்கட்டினர். சமஷ்டி பதுங்கியிருக்கின்றது என்றவாறெல்லாம் கதைகள் புனையப்பட்டன. பின்னர் நடந்ததை தமிழ் மக்கள் அறிவர். கோட்டாபய ராஜபக்ஷவின் நகர்வுகள் மிகவும் வெளிப்படை யானவையாக இருந்தன.
இலங்கையை ஒரு சிங்கள – பௌத்த நாடு என்னும் வகையில்இ அதனை மேலும் உறுதிப்படுத்தும் ஓர் அரசியல் யாப்பை கொண்டுவரும் முயற்சியில் கோட்டாபய ராஜபக்ஷ ஈடுபட்டார். ‘அறகலய’ மக்கள் எழுச்சியின் விளைவாக அவர் அதி காரத்திலிருந்து அகற்றப்படாமல் இருந்திருந்தால் ஒருவேளை அவ்வாறானதோர் அரசியல் யாப்பு வந்தும் இருக்கலாம் – ஒருவேளை அவ்வாறு நடந்திருந்தால் ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் 1978 அரசியல் யாப்பை விடவும் அதிக அதிகாரங்களை ஓரினத்தை நோக்கி குவிக்கும் சிங்கள – பௌத்த யாப்பு ஒன்றை கொண்டு வந்தவர் என்னும் வரலாற்றுக்கு கோட்டாபய சொந்தக்காரனாகி இருக்கலாம். ஒரு நாட்டின் மக்கள் ஜனநாயக முறைமையின் கீழ் ஓர் அரசியல் யாப்பைக் கொண்டுவர முற்பட்டால் அதில் ஓர் எல்லைக்கு மேல் வேறு நாடுகள் தலையீடு செய்ய முடியாது.
ஆனால் ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ என்பதுபோல் பொருளாதார நெருக்கடிக்கு முன்னால் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆர்ப்பாட்டமான சிங்கள கதைகள் அனைத்தும் காணாமல் போய்விட்டன. இறுதியில் அவமானகரமான அனுபவத்துடன் அதிகாரத்திலிருந்து கோட்டாபய துரத்தியடிக்கப்பட்டார். எவரும் எதிர்பாராத வகையில் கதிரையில் அமர்ந்த ரணில் விக்கிரமசிங்க மீண்டும் 13ஆவது திருத்தச் சட்டத்தை பேசு பொருளாக்கினார். ஆனால்இ பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த விடயங்கள் தொடர்பிலேயே பேசுவதாகக் கூறினார்.
இதேவேளை தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலிருந்த ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துமாறு கூறி இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தன. ஆனால் பின்னர் அரசியல் தீர்வு தொடர்பில் மூன்று கடிதங்கள் இந்தியாவுக்கு அனுப் பப்பட்டன. இவ்வாறனதொரு பின்புலத்தில் தமிழ் மக்களின் வாக்குகள் தன்னை நோக்கித்தான் வருமென்று நம்பிக் கொண்டிருக்கும் சஜித் பிரேமதாஸ 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது பற்றி கூறியிருக்கின்றார்.
ஆனால் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது என்று கூறுவதற்கும் பொலிஸ் அதிகாரம் உள்ளடங்கலான 13ஆவது திருத்தம் என்று பேசுவதற்கும் இடையில் வேறு பாடுகள் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் இவ்வாறான தேர்தல்கால வாக்குறுதிகளை நம்பி தமிழ் மக்கள் வாக் களிக்க முடியுமா?