தொடரும் நிச்சயமற்ற தன்மை?

0
174

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டமையைத் தொடர்ந்து நிலைமைகளில் ஓரளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
எரிபொருளுக்கான நீண்ட வரிசை இல்லாமல் போனது.
எரிவாயு கொள்கலன்களுடன் மக்கள் வீதிகளை மறிக்கும் நிலைமை மாறியது.
ஒப்பீட்டடிப்படையில் நிலைமைகள் சுமுகமாகின.
ஆனாலும் கணிசமான பிரச்னைகள் தீரவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பில் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை.
சில இணக்கப்பாடுகள் ஏற்பட்டிருந்தாலும்கூட அவை நடைமுறைக்கு வருவதற்கு காத்திருக்க வேண்டியிருக்கின்றது.
ஆனாலும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப்பெற்றாலும்கூட அதன் மூலம் பிரச்னைகள் முற்றிலுமாக தீர்ந்துவிடப் போவதில்லை.
ஏனெனில், நாணய நிதியம் இணங்கியிருக்கும் உதவித் தொகை சிறியது.
உண்மையில் நாணய நிதியம் அறிவித்திருக்கும் தொகையை விடவும் இந்தியா அதிக தொகையை கடனாக வழங்கியிருக்கின்றது.
பொருளாதார நிலைமைகள் தொடர்ந்தும் அச்சுறுத்தும் நிலையிலிருக்கின்றபோது மறுபுறம் அரசியல் நிலைமை தொடர்ந்தும் ஒரு நெருக்கடிக்குள்தான் இருக்கின்றது.
ரணில் ஜனாதிபதியாக இருந்தபோதிலும் பாராளுமன்றத்தின் அதிகாரம் இப்போதும் ராஜபக்ஷக்களின் வசமாகவே இருக்கின்றது.
எதிர்க்கட்சிகளும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு போதிய ஆதரவை வழங்காத நிலையில் ரணில் விரும்புவது போன்று பல்வேறு விடயங்களை செய்ய முடியவில்லை.
இவ்வாறானதொரு நிலைமை தொடரும்போதுதான், மறுபுறமாக எதிரணிகள் அரசாங்கத்தைக் கைப்பற்றும் முயற்சியிலும் தீவிரம் காண்பித்து வருகின்றன.
ஒருபுறம் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை வீழ்த்தப் போவதாகக் கூறிவருகின்றார். இன்னொருபுறம், ஜீ. எல். பீரிஸ் தலைமையிலான டலஸ் அழகப்பெரும அணியினர் அரசாங்கத்தை வீழ்த்த வேண்டுமென்று கூறுகின்றனர்.
இவை ஒருபுறம் என்றால் மறுபுறமோ பாராளுமன்றத்தை தங்கள் வசப்படுத்தியிருக்கும் ராஜபக்ஷக்களின் பொதுஜன பெரமுனவோ ரணில் விக்கிரமசிங்கவின் நகர்வுகளுக்கு முற்றிலுமாக ஒத்துழைப்பு
வழங்க மறுத்து வருகின்றது.
இந்த நிலைமையானது – நாடு தொடர்ந்தும் ஒரு வகையான அரசியல் நெருக்கடிக்குள் இருப்பதான தோற்றத்தையே காட்சிப்படுத்துகின்றது.
ரணில் இதனை எவ்வாறு சமாளிக்கப் போகின்றார்? அவரால் முடியுமா? இதற்கிடையில் 22ஆவது திருத்தச்சட்ட விவகாரத்திலும் மாறுபட்ட அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இப்போதிருப்பது போன்றதொரு நிலைமை தொடருமாயின், ரணில் எதிர்பார்ப்பது போன்று நிலை மைகளை சமாளிக்க முடியாது.
இதனை எதிர்கொள்வதற்கு இருக்கின்ற ஒரேயொரு வழி தேர்தலுக்கு செல்வதுதான்.
ஆனால், ராஜபக்ஷக்கள் தேர்தலை எதிர்கொள்ளத் தயங்குவதாகவே தெரிகின்றது.
தற்போதுள்ள சூழலில் தேர்தல் இடம்பெற்றால் ராஜபக்ஷக்களால் வெற்றியை பெற முடியாது.
அதேவேளை அவர்களின் தோல்வியும் கௌரவமான தோல்வியாக இருக்கப்போவதில்லை.
ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் தோல்வியடைவதற்கு எதுவுமில்லை.
வெற்றியடைவதற்கு வாய்ப்பு கிடைத்தால் அதனை அவர் உச்சளவில் பயன்படுத்திக் கொள்வார்.
ரணிலின் எதிர்பார்ப்பு இவ்வளவே.
ஆனால், ரணிலை தோற்கடிக்கும் அல்லது ரணிலுக்கு நெருக்கடியை கொடுக்கும் முயற்சிகள் நாட்டுக்கு நன்மையை கொண்டுவருமென்றால் அது பிரச்னைக்குரிய விடயமல்ல.
ஆனால், அரசாங்கத்தை வீழ்த்தப்போவதாகக் கூறும் எவரிடமும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான தெளிவான திட்டங்கள் இல்லை.
அதேவேளை மாற்றங்களுக்கு முட்டுக்கட்டை போடும் பொதுஜன பெரமுனவிடமும் சிறந்த வேலைத் திட்டங்கள் இல்லை.
இந்தப் பின்புலத்தில் நோக்கினால் எவர் அதி காரத்திலிருந்தாலும் இன்றைய நிலையில் நாட்டின் எதிர்காலமோ கையேந்தும் நிலையில்தான் இருக்கப் போகின்றது.
எனவே, தற்போதுள்ள அரசியல் கட்டமைப்பின் மூலம் அதிக தூரம் பயணம் செய்ய முடியாத நிலைமையே காணப்படுகின்றது.
மாற்றங்களுக்கு முட்டுக்கட்டையிடும் அரசியல் சூழல் தொடருமெனின் ரணிலாலும் எதனையும் முன்கொண்டு செல்ல முடியாமல் போகலாம்.
பொருளாதார நெருக்கடி மீளவும் பழைய அரசியல் பதற்ற நிலைமையை தோற்றுவிக்கலாம்.