தோட்டத் தொழிலாளர்களுக்கு, 33 சத வீத சம்பள உயர்வை வழங்குவதற்கு, பெருந் தோட்ட கம்பனிகள் முன்வந்துள்ளதாகவும், ஆனால், அதனை ஏற்க முடியாது எனவும், ஆயிரத்து 700 ரூபா அவசியம் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாகவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான கலந்துரையாடல், தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில், இன்று, கொழும்பில் உள்ள தொழில் அமைச்சில் இடம்பெற்றது.
தேசிய தொழிலாளர் சபையில் அங்கம் வகிக்கும் தொழிற் சங்கங்கள் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற் சங்கங்கள், கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தன.
இதில், அமைச்சர்களான மனுஷ நாணயக்கார, ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்; தலைவர் வடிவேல் சுரேஷ், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதிய தலைவர் பாரத் அருள்சாமி உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர்.
பெருந்தோட்டக் கம்பனிகளால் சம்பள உயர்வு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள முன்மொழிவு தொடர்பில், விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
எனினும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில், கம்பனிகளால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற் சங்கங்கள் நிராகரித்துள்ளன.
இந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், அனைத்து தொழிற் சங்கங்களும் அரசியல் செய்யாமல், ஒற்றுமையாக இருந்தால் தீர்வை அடையலாம் என தெரிவித்தார்.
சம்பள நிர்ணய சபையை கூட்டுவதற்கு, தொழில் அமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார்.
எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள், நல்ல தீர்வு கிடைக்கும்.
நாட்கூலி முறைமை பொருத்தமற்றது.
எனவே, நிரந்தரமானதொரு தீர்வை நோக்கி நகர வேண்டும்.
அந்த நிரந்தர தீர்வை அடைய காலம் எடுக்கும்.
அதுவரை ஆயிரம் ரூபாவிலேயே இருக்க முடியாது.
அதனால்தான், ஆயிரத்து 700 ரூபா கோருகின்றோம்.
குடும்பமொன்று 3 வேளை சாப்பிட வேண்டுமெனில், 76 ஆயிரம் ரூபா அவசியம்.
ஆனால் பெருந்தோட்ட பகுதிகளில் சராசரி வருமானம் 42 ஆயிரமாக உள்ளது.
இதனை ஏற்கமுடியாது.
அனைத்து தொழிற்சங்கங்களும் அரசியல் செய்யாமல், ஒற்றுமையாக இருந்தால் தீர்வை அடையலாம்.’ என அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.