இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் 16ஆவது அத்தியாயம் ஒரு வீரராக எம். எஸ். தோனியின் பிரியாவிடை அத்தியாயமாக அமையக்கூடும் என கருதப்படுகிறது.
இந்நிலையில் லக்னோவுடனான போட்டி புதன்கிழமை ஆரம்பமாவதற்கு முன்னர் ‘இது தனது கடைசி ஐபிஎல் அத்தியாயமாக இருக்கக்கூடும்’ என ரசிகர்கள் முன்னிலையில் 41 வயதான எம்.எஸ். தோனி வேடிக்கையாக பேசினார்.
கடைசி அத்தியாயத்தை ரசித்து மகிழ்கின்றீர்களா என தோனியிடம் வர்ணனையாளர் டெனி மொறிசன் கேட்டபோது, “நல்லது, இது எனது கடைசி அத்தியாயம் என நீங்களே தீர்மானித்துவிட்டீர்கள்” என பதிலளித்தார்.
இந்த பதிலைக் கேட்டு அரங்கில் குழுமியிருந்த ரசிகர்கள் கரகோஷத்துடன் ஆரவாரம் செய்தபோது மீண்டும் பேசிய மொறிசன், “அவர் (தோனி) மீண்டும் வருவதை நான் விரும்புகிறேன். அவர் அடுத்த வருடம் மீண்டும் விளையாட வருவார்” என்றார்.
சென்னை சுப்பர் கிங்ஸை 4 தடவைகள் சம்பியனாக வழிநடத்திய தோனி, இந்த வருடம் விளையாடும் எல்லா மைதானங்களிலும் பலத்த பாராட்டுதல்களைப் பெற்று வருகிறார்.
தோனியை உற்சாகப்படுத்தும் வகையில் சென்னையின் மஞ்சள் நிற சீரூடைகளுடன் ரசிகர்கள் அரங்கில் நிறைந்து வழிகின்றனர்.
கொல்கத்தா ஈடன் கார்ட்ன் விளையாட்டரங்கில் கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது அரங்கில் குழுமியிருந்த ரசிகர்களை நோக்கி தனது நன்றிகளை வெளியிட்ட தோனி, “அவர்கள் எனக்கு பிரியாவிடை அளிக்க முயற்சிக்கின்றனர்” என்றார்.
கிரிக்கெட்டில் அதிஉச்ச ஆற்றலை வெளிப்படுத்திவந்தபோது சிறப்பாக போட்டியை முடித்துவைக்கக்கூடியவராக இருந்த தோனி, இந்தியாவுக்கு அங்குரார்ப்பண இருபது 20 உலகக் கிண்ணம் உட்பட 2 உலகக் கிண்ணங்களையும், சம்பியன்ஸ் கிண்ணத்தையும் வென்றுகொடுத்த தலைவராவார்.
உலகிலேயே இந்த 3 கிண்ணங்களையும் வென்றெடுத்த ஒரே தலைவர் தோனி ஆவார்.
துடுப்பாட்டத்தில் ஆற்றலை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்த அவர் ஒரு சிறந்த ஆளுமைமிக்க தலைவராக போற்றப்படுகிறார். அதனால்தான் அவரை எல்லோரும் ‘தல’ (தலைவர்) என பிரியமுடன் அழைக்கின்றனர்.