தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகரான சூரி கதையின் நாயகனாக முதன் முறையாக நடித்திருக்கும் ‘விடுதலை’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவின் தனித்துவம் வாய்ந்த படைப்பாளிகளில் ஒருவரான இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘விடுதலை’.
இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பவானி ஸ்ரீ நடித்திருக்கிறார்.
இவர்களுடன் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன், ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன், இளவரசு, மூணார் ரமேஷ், சரவண சுப்பையா, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். சிறுகதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர் எஸ் இன்போடெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட்குமார் தயாரித்திருக்கிறார்.
அண்மையில் இந்த படத்தின் முதல் பாகத்திற்கான முன்னோட்டம் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட குறுகிய கால அவகாசத்தில் இருபத்தைந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் மார்ச் 31 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் சூரியின் மூன்றாண்டு கால உழைப்பில் உருவாகி வெளியாகவிருக்கும் ‘விடுதலை’ திரைப்படம், அவரை தொடர்ந்து கதையின் நாயகனாக திரைத்துறையில் பயணிக்க வைக்குமா? அல்லது மீண்டும் நகைச்சுவை வேடங்களில் நடிப்பதை தொடர வைக்குமா? என்பது இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தெரியவரும் என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள்.