நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண அரசியல் நிலைமை சுகாதாரத்துறைக்கு பாரிய நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண அரசியல் நிலைமை பாரிய நெருக்கடிகளைத் தோற்றுவித்திருக்கின்றது.
அந்த நாட்டிற்கு யார் ஜனாதிபதி யார் பிரதமர் என்றே தெரியாத நிலைமை காணப்படுகின்றது.
எரிபொருள் தட்டுப்பாட்டினால் சுகாதாரசேவை ஸ்தம்பிதம் அடைந்திருக்கின்றது. நூற்றுக்கு 40 சதவீதம்கூட சுகாதார சேவையினை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது.
சுகாதாரத்தரப்பினருக்கான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதிலும் பாரிய சிக்கல் நிலைமைகள் காணப்படுகின்றன.
நாட்டின் நெருக்கடியினைத் தீர்ப்பதற்கான வழிகள் என்ன என்பதை இந்த ஆட்சியாளர்கள் விரைந்து முன்னெடுக்க வேண்டும்.
இந்தநிலையில் மக்கள் தமது அடிப்படை மருத்துவத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்வதற்கு முடியாத நிலைமைகள் காணப்படுகின்றன. எதிர்வரும் சில நாட்களில் பல அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் முடிவடையும் நிலை காணப்படுகின்றது.
அரசாங்கம் இந்த நிலையில் சுகாதாரத்துறையிலும் கவனத்தினைச் செலுத்தவேண்டும்.
அத்துடன் அவசரசிகிச்சைகளுக்கான அத்தியாவசிய மருந்துப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.
உடனடியாக சுகாதாரத்துறையில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டியது அவசியம் என எமது சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கின்றொம்.
அத்துடன், நாட்டில் தற்போது நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
மேலும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அனைவரும் இணைந்து செயற்படவில்லையாயின் நாடு மீண்டும் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இந்தநிலையில் சுகாதாரத்துறையினர் பல தியாகங்களுக்கூடாகவே தமது சேவைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது காணப்படும் அரசாங்கத்தில் மாற்றம் வேண்டுமென மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்தார்கள். அதனடிப்படையில் ஜனாதிபதி பதவியிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் தற்போதுள்ள ஜனாதிபதியும் மக்களது ஆதரவற்றவர். எனவே மீண்டும் அரசியலில் பல சிக்கல்நிலைமைகள் தொன்றுவதற்கு வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.