நாட்டில் அமைதியை பேண ஜனாதிபதி நடவடிக்கை

0
158

நாட்டிலுள்ள சகல மாவட்டங்களிலும் பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக, பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் முப்படையினரை பணிக்கு அழைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தல், நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தலில், ‘பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவினால் எனக்குரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, ஆயுதந்தாங்கிய படையின் சகல உறுப்பினர்களையும் அனைத்து மாவட்டங்களிலும் பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக இம்மாதம் 22 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு முப்படையினர் பாதுகாப்பு கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.