நாட்டுக்காக ஜனாதிபதியுடன் மீண்டும் பேசத் தயார்!

0
160

பயனளிக்கும் மறுசீரமைப்பு செயற்பாட்டின் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில், ஜனாதிபதியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தான் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். மறுசீரமைப்புகளுக்கான புத்திஜீவிகள் ஒன்றியத்தின் விசேட கூட்டம் நேற்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போது நிலவும் சூழ்நிலையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வரப்பிரசாதங்கள் சலுகைகளைப் பெறுவதற்குப் பதிலாக பிரயோக ரீதியாக தலையிட்டு நாட்டைக் கட்டியெழுப்புவதே தமது நோக்கமாகும் என தெரிவித்தார். மேலும் அரசாங்கம் கொண்டு வரும் நேர்மறையான, முற்போக்கான முன்மொழிவுகளை ஆதரிக்கும் வகையில் ஒரு வேலைத்திட்டம் வடிவமைக்கப்படும் எனவும், ஒருபோதும் மக்களின் எண்ணங்களுக்கும், விருப்பங்களுக்கும் துரோகம் இழைக்கமாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார். அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு கையிருப்பில் எஞ்சியுள்ள டொலர்களை அழிக்கும் செயற்பாட்டிற்கு ஒருபோதும் பங்களிக்கப்போவதில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தற்போது அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்ப பதவிகள் அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.