நுவரெலியாவில் சீரற்ற காலநிலையால் வெசாக் நிகழ்வுகளுக்கு இடையூறு!

0
69

நாடு முழுவதும் நிலவும் கடும் மழை மற்றும் பருவக்காற்று காரணமாக நுவரெலியா பதுளை பிரதான வீதி உட்படப் பல வீதிகள் மரங்கள் முறிந்து பல்வேறு வழிகளில் சேதமடைந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

நுவரெலியா நகர எல்லையைச் சுற்றியுள்ள பல வீதிகள் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக மூடப்பட்டுள்ளதோடு, நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலைமையால் நுவரெலியா நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல வெசாக் நிகழ்ச்சிகள் தடைப்பட்டுள்ளதுடன், அமைப்பாளர்கள் வெசாக் டன்சல்களுக்கு மாற்று இடங்களைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. 

நுவரெலியா மாவட்டம் முழுவதும் நிலவும் கடும் பனிமூட்டம், கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக நுவரெலியா பிரதேசத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட வெளியூர்களில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரித்துள்ளது.