புதுவருட பிறப்பையொட்டி வழங்கப்பட்ட ஒருவார விடுமுறை நாளையுடன்; நிறைவுக்கு வருகின்ற நிலையில், கொழும்பு உள்ளிட்ட நகர்புறங்களிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்கள், மீண்டும் கொழும்புக்கு திரும்பி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், பதுளை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் பிரதான பஸ் தரிப்;பிடங்களில் அதிகளவான பயணிகள் பஸ்ஸூக்காக காத்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
குறிப்பாக பதுளை பஸ்தரிப்பிடத்தில் இன்று (17) காலை முதல் அதிகளவான பயணிகள் பஸ்ஸூக்காக காத்திருந்தனர்.
பயணிகளின் நலனை கருத்திற்கொண்டு இ.போ.ச, தனியார் பஸ்கள் உள்ளடங்களாக 40 பஸ்கள் இன்று சேவையில் அமர்த்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பதுளை டிப்போ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஸ்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு தேவையான எரிபொருளை இலங்கை போக்குவரத்து சபை தொடர்ந்தும் வழங்கும் என்று, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், சித்திரை புத்தாண்டு காலத்தில் பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக சுமார் 1,000க்கும் மேற்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபை அதிகாரிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.