பயணக் கட்டுப்பாட்டால் வெறிச்சோடியது மட்டக்களப்பு

0
342

நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதால் மட்டக்களப்பு மாவட்டம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
இதேவேளை வீதிகளில் பாதுகாப்புத் தரப்பினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் கோவிட் தொற்று பெரும் ஆபத்தாக மாறியுள்ள நிலையில், நாடு முழுவதுமான பயணக்கட்டுப்பாடு நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இதன்படி, தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையானது, எதிர்வரும் நாளை மறுதினம் அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

25ம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும் பயணத் தடை 19 மணித்தியாலங்களின் பின்னர் அன்றிரவு பதினொரு மணிக்கு மீண்டும் நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அன்றைய தினம் இரவு 11 மணிக்கு நடைமுறைக்கு வரும் நாடளாவிய ரீதியிலான பயணத் தடை எதிர்வரும் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 4.00மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பயணத் தடை விதிக்கப்படும் காலப் பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எந்தவித தட்டுப்பாடும் இன்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பிற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.
எவ்வாறாயினும், பயண கட்டுப்பாடு அமுலில் இருக்கும்போது தேசிய அடையாள அட்டை முறை செயற்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.