இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர் பொலிஸார் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதியின் பாஜக எம்எல்ஏ கேதார் நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் மீது மதுபோதையில் சிறுநீர் கழித்துள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாகவும், எனினும், மேற்படி பாஜக எம்எல்ஏவின் பிரதிநிதி என்பதால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அச்சம் காரணமாக, பொலிஸில் முறைப்பாடு செய்யாமல் இருந்தனர் எனவும் கூறப்படுகிறது.
மேற்படி சம்பவத்தின் போது பதிவுசெய்யப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து எதிர்க்கட்சியினர் கண்டங்களைத் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ், பழங்குடியினர் நலன் குறித்து பொய் பேசும் பாஜக தலைவர், பழங்குடியின ஏழை மீது இப்படி சிறுநீர் கழிக்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என அவர் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கமல்நாத், ‘நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற கொடூரமான மற்றும் மோசமான செயலுக்கு இடமில்லை. மத்திய பிரதேசத்தில் பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் பிரவேஷ் சுக்லாவை கைது செய்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, பிரவேஷ் சுக்லா தனது பிரதிநிதி இல்லை என பாஜக எம்.எல்.ஏ கேதர்நாத் சுக்லா மறுத்திருந்தார்.
எனினும், பிரவேஷ் சுக்லாவின் தந்தையான ராமகாந்த் சுக்லா , தனது மகன் எம்.எல்.ஏவிடம் பிரதிநிதியாக பணியாற்றுவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் பாஜக எம்.எல்.ஏ-வின் பிரதிநிதி என்பதால்தான் அவர் எதிர்க்கட்சிகளால் குறிவைக்கப்படுகிறார். இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடைபெற்று நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்று ராமகாந்த் சுக்லா கூறியுள்ளார்.