பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்த வேண்டாம்: பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் வலியுறுத்தல்

0
142
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்கள் ஊடகங்கள் மூலம் வெளிப்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற சிறுவர் பேரவையின் தலைவி ரோகினி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.அண்மையில் பாராளுமன்றத்தில் சிறுவர்களுக்கான பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் இது பற்றிக் குறிப்பிடப்பட்டது.
குறிப்பாக சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் வன்முறைகள் போன்ற சம்பவங்களில் தொடர்புடையய சிறுவர்களின் அடையாளங்களை ஊடகங்கள் ஊடாக வெளிக்கொணருவது சம்பந்தப்பட்ட சிறுவர்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இவர்கள் ஊடகங்கள் மூலம் வெளிப்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு தொழில் பயிற்சி வழங்குவதன் முக்கியத்துவம் குறித்தும், 18 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை சமூகமயமாக்குவதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்தும், அவர்கள் சுயதொழிலில் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்குவது குறித்தும் இங்கு விரிவாக விவாதிக்கப்பட்டது.அதுமட்டுமின்றி, வளர்ப்பு பெற்றோர் அமைப்பை அறிமுகப்படுத்துதல், குழந்தைகளை உறவினர்களின் பராமரிப்பில் வைப்பது, உள்ளூர் தத்தெடுப்பு போன்றவை குழந்தைகளுக்கான மாற்று பராமரிப்பு முன்மொழிவுகளாகவும் மன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும், சிறு குற்றங்களுக்காக சிறுவர் சந்தேக நபர்களை நல்லிணக்க சபைக்கு பரிந்துரைத்தல், வேறு மாற்று தண்டனைகளுக்கு உட்படுத்துதல் மற்றும் நிறுவன சீர்திருத்தத்தை கடைசி தெரிவாக பயன்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.