மனித உரிமைகள் மீறல் குற்றவாளியான பொலிஸ்மா அதிபரை பாதுகாப்பதற்கு முயற்சிப்பவர்களின் பின்னணியை நாம் அறிவோம். இதற்குரிய பதில் இவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் கிடைக்கும் என்று வெளிவிவகாரத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில்,
முன்னாள் பிரதம நீதியரசரைப் பாராளுமன்றத்துக்கு அழைத்து வந்து முறையற்ற வகையில் சட்டத்துக்கு விரோதமான முறையில் அவரை பதவி நீக்கியவர்கள் இன்று எம்மை நோக்கிக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது ஆச்சரியமாகவுள்ளது. நாட்டில் அரசியலமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டத்தின் பிரகாரமே பொலிஸ்மா அதிபரைப் பதவி நீக்குவதற்கான நடவடிக்கைகள் எம்மால் எடுக்கப்பட்டன.
இந்த முறைகேடான, மோசடியான மற்றும் மிலேச்சத்தனமான மனித உரிமைகள் மீறல் குற்றவாளியான பொலிஸ்மா அதிபரைப் பாதுகாப்பதற்கு முயற்சிப்பவர்களின் பின்னணியையும் நாம் அறிவோம். இதற்குரிய பதில் இவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் கிடைக்கும்.
சிறைக் கைதி ஒருவரின் அந்தரங்க உறுப்பில் சித்தாலேப தைலத்தைப் பூசி மிகவும் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கிய மனித உரிமை மீறல் வழக்கில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உயர்நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்டுள்ளார்.
இந்த நபரை பொலிஸ்மா அதிபராக நியமிக்க வேண்டாம் என்று நாட்டில் பல்வேறு தரப்பினர் கடுமையாக வலியுறுத்தினார்கள். மக்களின் எதிர்ப்பை கருத்திற் கொள்ளாமலே கடந்த அரசாங்கம் தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா அதிபராக நியமித்தது.
காலி முகத்திடல் போராட்டக்களத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பொறுப்பாளி .அன்றைய தினம் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தாமலிருந்திருந்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டிருக்காது என்றார்.