அண்மையில், புதுக்கடை நீதிமன்றத்தில் இடம்பெற்ற படுகொலையைத் தொடர்ந்து ஒருவகையான பாதுகாப்பு கரிசனை எழுந்துள்ளது. பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான மோதலின் விளைவாகவே குறித்த படுகொலை இடம்பெற்றிருந்தது. ஆனால், குறித்த கொலை நீதிமன்றத்துக்குள் இடம்பெற்றிருப்பதைக் கொண்டே பாதுகாப்பு கரிசனை எழுந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, மேலும் சில துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் கொலைகளும் இடம் பெற்றுள்ளன.பாதாள உலகக் குழுக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வதும் ஒருவரை ஒருவர் இலக்குவைத்து பழி தீர்ப்பதும் இலங்கையில் அவ்வப்போது இடம்பெறும் விடயம்தான். ஆனால், அச்சமற்ற சூழலொன்றை ஏற்படுத்தப் போவதாகக் கூறிவரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் காலத்தில் இவ்வாறான கொலைகள் இடம்பெறுவதால் இதனை ஒரு பிரதான பேசுபொருளாக எதிரணியினர் முன்வைத்து வருகின்றனர்.
ஒருவகையில் இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சவாலாகவே மாறியிருக்கின்றது. ஏனெனில், ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தனது பாதுகாப்பு தொடர்பில் கரிசனையை வெளிப்படுத்தவில்லை. அத்துடன், ஜனாதிபதிக்கான பாதுகாப்பை குறைத்திருப்பதையும் ஒரு முன்னுதாரணமான விடயமாகவே அவர் முன்வைத்திருந்தார். ஜனாதிபதியே தனது வாகனத்தின் கதவைத் திறந்து இறங்கிவரும் காட்சிகள் மக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றிருந்தன. ஆனால், இலங்கை போன்ற நாடுகளில் பாதுகாப்பு விடயங்களில் கரிசனையற்றிருப்பது உசிதமான விடயமா என்னும் கேள்வியையே மேற்படி சம்பவங்கள் எழுப்பியிருக்கின்றன.
இலங்கை நீண்டகாலமாக உள்நாட்டு யுத்தத்துக்குள் சிக்கியிருந்த ஒரு நாடு. அந்த வகையில் இலங்கையின் அரசியலில் துப்பாக்கிக் கலாசாரம் புரையோடிப் போயிருந்தது. அரசியலில் தங்களின் எதிரிகளை அகற்றுவதற்கு துப்பாக்கிகளை பயன்படுத்தும் கலாசாரமானது நீண்டகாலமாக ஓர் அச்சுறுத்தும் காரணியாக இருந்திருக்கின்றது. ஆனால், யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து அவ்வாறான நிலைமை படிப்படியாக குறைவடைந்தது. இப்போது அரசியல்வாதிகள் அச்சப்படுமளவுக்கான நிலைமை இல்லை. எனினும், அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் தென்னிலங்கையில் பாதாள உலகக் குழுக்கள் பலமான நிலையில் இருக்கின்றன என்பதையே காண்பிக்கின்றன.
அவர்களைப் பயன்படுத்தி பல விடயங்களை மேற்கொள்ளக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. நீதிமன்ற வளாகத்துக்குள் இடம்பெற்ற படுகொலை அதற்கான எடுத்துக்காட்டாக இருக்கின்றது. இதற்கு முன்னரும் நீதிபதியையே பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர் சுட்டுக் கொலை செய்த சம்பவமும் இருக்கின்றதுதான். ஆனால், இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய பிறிதொரு விடயம் உண்டு. அதாவது, நல்லாட்சி அரசாங்கமாகக் காண்பிக்கப்பட்ட ஆட்சிக் காலத்தில்தான் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. அதுவே பின்னர் ரணில் – மைத்திரி ஆட்சியை மாற்றுவதற்கான பிரதான காரணியாக மாறியது.
நாட்டில் பாதுகாப்பு பலவீனமாக இருக்கிறது என்னும் காரணத்தைக் காண்பித்தே கோட்டாபய அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தார். கோட்டாபயவால் அரசாங்கத்தைக் கொண்டு நடத்த முடியாது என்னும் நிலையில்தான் மீண்டுமோர் ஆட்சி மாற்றத்துக்கான காரணம் உருவாகியது. இந்த நிலையில் அநுர அரசாங்கத்தில் இது போன்ற விடயங்கள் தொடருமாக இருந்தால், நாட்டில் மீண்டும் பாதுகாப்பற்ற சூழலொன்று ஏற்பட்டுவிட்டதான அரசியல் தோற்றப்பாடே உருவாகும். அது இறுதியில் அரசாங்கத்தின் வீழ்ச்சியாகவும் மாறலாம்.