புதிய அமைச்சரவை குறித்து வௌியான தகவல்!

0
89

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக, அடுத்த வாரம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
சர்வகட்சி அரசு அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடியுள்ள போதிலும், அது தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில், அனைத்துக் கட்சிகளின் கீழ் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அறியமுடிகின்றது.
இந்த அமைச்சரவை நியமனத்தின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டிய மாவட்ட தலைவர்களின் பெயர் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கலாநிதி ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க, ஜனக பண்டார தென்னகோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, நாமல் ராஜபக்ச, கலாநிதி பந்துல குணவர்தன, சனத் நிஷாந்த, காஞ்சன விஜேசேகர ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அறியமுடிகிறது.
புதிய அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலர் உள்வாங்கப்பட உள்ளதாகவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான் மற்றும் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.
சர்வகட்சி அரசொன்றை அமைக்க முடியாத பட்சத்தில் தேசிய அரசை அமைப்பது தொடர்பிலும் அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரியவருகிறது.