முன்னர் இருந்த அரசியல் சூழல் இப்போது முற்றிலுமாகவே இல்லாமல் போய்விட்டது. முன்னைய அரசியல் சூழல் இப்போது இல்லை என்னும்போது, முதலில் புரிந்து கொள்ளவேண்டிய அடிப்படையான விடயம் என்னவென்றால், முன்னைய வாய்ப்புகள் எவையும் தற்போது இல்லை. இதனை இன்னும் இலகுவாகக் கூறுவதானால், வாய்ப்புகளை தவறவிட்டால் அல்லது வாய்ப்புகளை புரிந்து கொள்ள முடியாது தவறிழைத்தால் அந்த வாய்ப்புகள் மீண்டும் ஒருபோதும் கிடைக்காது. பின்னர் வாய்ப்புகள் கிடைத்தாலும்கூட, அவை முன்னைய வாய்ப்புகள் போன்று இருக்காது – இருக்கவும் முடியாது.
இந்த அடிப்படையில் நோக்கினால் – அரசியல் அர்த்தத்தில், ஈழத் தமிழினத்துக்கு இப்போது எந்த வாய்ப்பும் இல்லை. வாய்ப்புகள் புதிய அரசியல் சூழ்நிலைகளால் மட்டும்தான் உருவாகும். அவ்வாறான புதிய அரசியல் சூழலானது ஒரு நெருக்கடியின் விளைவாகவும் ஏற்படலாம். அல்லது தேவையிலிருந்தும் ஏற்படலாம். இந்த அடிப்படையில் நோக்கினால், இலங்கை ஒரு வரலாற்று பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்தது. வங்குரோத்தை பிரகடனம் செய்தது. இப்போதும் அதிலிருந்து முழுவதுமாக மீண்டு வந்துவிட்டதாகக் கூறமுடியாது.
ஆனாலும் இவ்வாறானதொரு நெருக்கடியான அரசியல் சூழலில்கூட, ஈழத் தமிழரின் உரிமைசார் கோரிக்கைகள் ஒரு பொருட்டாகக் கொள்ளப்படவில்லையே ஏன்? பொருளாதார பிரச்னைக்கான வேர் இனப்பிரச்னைக்கான தீர்வில்தான் தங்கியிருக்கிறது. எனவே அதற்கான நியாயமான தீர்வைக் காணாது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாது. இதனை சர்வதேச நாணய நிதியம் உணரவேண்டும் என்றெல்லாம் ஈழ அரசியல்வாதிகளும் சிவில் சமூகமாக தங்களை காண்பித்துக் கொள்பவர்களும் உரத்து சத்தமிட்டனர். ஆனால், அதனை எவருமே பொருட்படுத்தவில்லை.
இது எதனைக் காண்பிக்கின்றது? அரசியல் சூழ்நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. இன்றைய உலக அரசியல் சூழலில் மனித உரிமைசார்ந்த விடயங்கள் கீழ் நிலைக்குச் சென்றுவிட்டது. பலம்பொருந்திய நாடுகளின் நலன்சார் போட்டி மேல் நிலைக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் மனித உரிமை என்று வெறுமனே கூறிக்கொண்டு தற்போதைய உலக அரசியல் சூழலில் விடயங்களைக் கையாள முடியாது. இந்த விடயங்களை எல்லாம் புரிந்து கொண்டு அதற்கேற்ப ஈழ அரசியலை முன்னெடுக்கும் வல்லமையுடன் அரசியல் கட்சிகளோ, அரசியலாளர்களோ இல்லை.
தற்போது அரசியல்வாதிகளாகத் தங்களை அடையாளப்படுத்தியிருப்பவர்களில் பெரும்பான்மையினர் தங்களின் அரசியல் அணுகுமுறைகளில் படுமோசமான தோல் வியின் சாட்சியாக இருப்பவர்கள். இவர்களது ஆற்றலின்மைதான் இந்த அரசியலை இந்தளவுக்குச் சீரழித்தது. இவ்வாறானவர்கள் தொடர்ந்தும் அரசியலை தீர்மானிக்கும்போது எந்தவொரு முன்னேற்றகரமான விடயமும் இடம்பெற வாய்ப்பில்லை. இதனை முதலில் தமிழ் மக்கள் உணர வேண்டும். அவ்வாறில்லாது போனால் புதியதோர் அரசியல் கலாசாரம் ஈழத் தமிழ்ச் சூழலில் மலராது. தமிழ் மக்கள் மத்தியில் புதியவர்களைத் தேடுவது மட்டுமல்ல முன்னேற்றகரமான – காலத்துக்குப் பொருத்தமான அரசியல் சிந்த னையை முன்வைக்கக்கூடியவர்களை நோக்கி தமிழ் மக்கள் திரும்ப வேண்டும். அப்போதுதான் இருக்கின்ற நிலைமையில் ஓரளவாவது மாற்றங்கள் ஏற்படக்கூடும்.