ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழக்கத்துக்கு மாறாக ஒரு விடயத்தை நாடாளுமன்றத்தில் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
புத்தபெருமானின் பொருளாதார தத்துவங்களை பொருட்படுத்தாமையினால்தான் – நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருக்கின்றது.
நாடாளுமன்றத்தில் புதிய பாதீட்டை சமர்பித்து, உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
உரையின் ஆரம்பத்திலும் முடிவிலும் புத்தரின் போதனைகளை நினைவுபடுத்தியிருக்கின்றார்.
புத்தரின் போதனைகளில் ஒன்று, சமநிலையான வாழ்வு – அதாவது, ஒரு மனிதன் வரவுக்கு மீறி செலவு செய்யக்கூடாது, இருப்பதை கொண்டுவாழ்வை சிறப்பாக வாழவேண்டும்.
அதேபோன்று, நுகர்வுக்காக கடன் களை பெறக்கூடாது – மாறாக முதலீட்டுக்காகவே கடன்களை பெற வேண்டும் – அதிக வட்டிக்கு கடன்களை வாங்கி நுகர்வுக்கு செலவளித்தமையினால்தான் நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருக்கின்றது.
நாம் புத்தபெருமானின் பொருளாதார தத்துவங்களை பொருட்படுத்தாமையினால்தான் இவ்வாறானதொரு நெருக்கடிக்கு முகம் கொடுத்திருக்கின்றோம்.
இதன்மூலம் முன்னைய ஆட்சியாளர்கள் புத்தரின் போதனைகளை முறையாக பின்பற்றவில்லை என்கிறார் ரணில்.
நாடு நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும்போது, மக்களை சமாளிக்கும், ஓர் உத்தியாக மக்களது நம்பிக்கைளில் உயர்வாக போற்றப்படும் விடயங்களை ஆட்சியாளர்கள் ஒரு கருவியாக கையாள்வதுண்டு.
அந்த உத்தியைத்தான், ரணிலும் கையாள முயன்றிருக்கின்றார். இதன்மூலம் சிங்கள மக்களை ஆற்றுப்படுத்தவே அவர் முயல்கின்றார் – மாறாக தமிழ், முஸ்லிம் மக்களை அல்ல.
ரணிலின் கூற்றுப்படி சிந்தித்தால், புத்தரின் போதனைகளை இந்த விடயத்தில் மட்டும்தானா, இலங்கையின் ஆட்சியாளர்கள் பின்பற்றவில்லை?
புத்தபெருமான் தமிழ்மக்களாலும் போற்றப்படும் ஒருவர். ஒரு காலத்தில் வடக்கு, கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் புத்தமதத்தை தங்களின்
நம்பிக்கையாக பின்பற்றியிருக்கின்றனர்.
அந்த வழிபாட்டின் அடையாளங்கள்தான், வடக்கு கிழக்கிலுள்ள பிரதான புத்த விகாரைகள்.
ஆனால் அவற்றை சிங்களவர்களுக்குரியதாக அடையாளப்படுத்தி – அதனையும் தங்களின் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்காக ஆட்சியாளர்கள் பயன்படுத்து
கின்றனர்.
இது புத்தபெருமானின் போதனைகளுக்கு உட்பட்டதா? புத்தபெருமானின் தம்மபத போதனை கூறுகின்றது.
வெறுப்பு, வெறுப்பையே பிரசவிக்கும் – அன்பே அன்பை பிரசவிக்கும்.
வெற்றி, வெறுப்பை வளர்க்கின்றது.
தோற்கடிக்கப்பட்டவர்கள் துக்கத்தில் வாழ்கின்றார்கள்.
அமைதியானவர்கள் வெற்றி, தோல்வி இரண்டையும் கடந்து அமைதியாக வாழ்கின்றார்கள்.
பகையை நல்லிணக்கத்தாலும், தீமையை நன்மையாலும், கஞ்சத்தனத்தை தர்மத்தாலும், பொய்யை உண்மையாலும் வெல்லுங்கள் என்று, புத்தர் பெருமான் போதிக்கின்றார்.
புத்தபெருமான் மக்களின் நலனுக்கு பயனளிக்காத அரசியலை ஓர் அரசியலாகவே கருதவில்லை.
ஓர் அரசாங்கமானது, சமூக ஒழுங்கையும், நலனையும் உறுதிப்படுத்துவதுடன், அது தர்மத்துடன் ஒத்துப் போவதாகவும் இருக்கவேண்டும் என்றார்.
புத்தத்தை தங்களின் அரசியல் கருவியாக்கியிருக்கும், இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்கள் இந்தப் போதனைகளை எப்போதாவது, எண்ணிப் பார்த்ததுண்டா
சொந்த மக்களை தோற்கடித்ததை வெற்றியாக கொண்டாடுகின்றீர்கள்.
துயரத்தில் வாடும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏளனம் செய்கின்றீர்கள்.
ஆகக்குறைந்தது அரசியலமைப்பிலுள்ள ஏற்பாடுகளை கூட அமுல்படுத்தமாட்டோம் என்று அடம்பிடிக்கின்றீர்கள்.