புனர்வாழ்வு பணியக சட்டமூலம், காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை இலக்கு வைத்து உருவாக்கப்படவில்லை : நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச

0
143

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை, காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இலக்கு வைத்து உருவாக்கவில்லை என, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இலக்கு வைத்து, அவர்களை தண்டிப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது என, சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எனினும் அவ்வாறான நோக்கம் எதுவுமில்லை. யுத்தத்திற்கு பிந்தைய காலகட்டத்தில், நபர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கான கட்டமைப்பு எதுவும் இருக்கவில்லை.
இதன் காரணமாக, நபர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கு, அரசாங்கம் முயல்கின்றது. புனர்வாழ்வு செயற்பாடுகள் நடைமுறையில் உள்ளன. பல புனர்வாழ்வு நிலையங்கள் உள்ளன.
முக்கியமான புனர்வாழ்வு பணியகம், கந்தக்காட்டில் உள்ளது. நீதிமன்றம் தனது கருத்தை வழங்கியதும், அது சபாநாயகரிடம் கையளிக்கப்படும்.
அவர் அதனை நாடாளுமன்றத்திற்கு தெரிவிப்பார். குறிப்பிட்ட சட்டமூலம் தொடர்பில் அச்சம் உள்ளதால், பலர் அது குறித்த தங்கள் கரிசனைகளை வெளியிட்டுள்ளனர்.
இந்த சட்டமூலம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு முன்னர், கலந்தாலோசனைகளை மேற்கொள்ள, நான் திட்டமிட்டுள்ளேன்.
நாங்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம். கரிசனை உள்ள எவரும், இது தொடர்பில் கலந்துரையாட முன்வரலாம். என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.