10 அணிகள் இடையிலான 18ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நாளை (08) இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக லக்னோ அணி கொல்கத்தாவிற்கு சென்றுள்ளது.
அங்கு இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த நிக்கோலஸ் பூரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இதுவரை 4 போட்டிகளில் ஆடி 201 ஓட்டங்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை (அதிக ஓட்டம் அடித்தவருக்கான தொப்பி) கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் பயிற்சியை மேற்கொண்டு வரும் நிக்கோலஸ் பூரனின் கால்களை, கே.கே.ஆர். அணியின் ஆலோசகரும், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரருமான பிராவோ தொட்டு வணங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நகைச்சுவைக்கு பெயர் பெற்ற பிராவோ, பயிற்சியின்போது மைதானத்தில் பூரனை அணுகி நகைச்சுவையான முறையில் அவரது கால்களைத் தொட்டு வணங்கி உள்ளார். இந்த சம்பவம் கிரிக்கெட்டில் சகோதரத்துவத்தின் நட்பு மற்றும் மரியாதைக்குரிய தன்மையை எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும் நகைச்சுவையாகத் தோன்றும் இந்த சைகை, சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.