பெற்றோலிய கூட்டுத்தாபன விடயத்தில் மின்சார சபை துரித நடவடிக்கை!

0
231

மின்சார சபை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை விரைவாக செலுத்த அமைச்சு மட்டத்தில் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளதாக, இலங்கை மின்சார சபையின் பதில் பொதுமுகாமையாளர் சுசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
களனி திஸ்ஸ மின்நிலையத்திற்கு தேவையான 3 ஆயிரம் மெற்றிக்தொன் உராய்வு எண்ணெயை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 20 ஆம் திகதி விநியோகித்துள்ளது.
சப்புகஸ்கந்த மின்நிலையத்தின் பணிகள் தற்போது வழமை நிலைக்கு திரும்பியுள்ளன. நீர்மின் உற்பத்திக்கு தேவையான நீரை தடையின்றி விநியோகிக்க நீர்ப்பாசனத்துறை அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது. பொது காரணிகளின் காரணமாகவே மின்விநியோக கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு தழுவிய ரீதியில் மின் விநியோகம் 5 மணித்தியாலம் அளவில் தடைப்படும் என மின்சார சபை தொழிற்சங்கத்தினர்
குறிப்பிடும் கருத்துக்கள் அடிப்படையற்றவை.
நாட்டு மக்களுக்கு 24 மணித்தியாலமும் மின்சாரத்தை விநியோகிப்பது மின்சார சபை சேவையாளர்களின் தலையாய கடமையாகும்.
குறுகிய நோக்கத்திற்காக மக்களுக்கான கடமையில் இருந்து விலகுவது வெறுக்கத்தக்க செயற்பாடாகும். மின்பாவனையாளர்களுக்கு நெருக்கடி ஏற்படாத வகையில் மின்விநியோகம் சில நேரம் துண்டிக்கப்படும். மின்விநியோக துண்டிப்பு தொடர்பிலான அறிவித்தல் பாவனையாளர்களுக்கு முன்கூட்டியதாகவே அறிவிக்கப்படும் என்றும் இலங்கை மின்சார சபையின் பதில் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.