பேச்சில் அறிவும் நிதானமும் அவசியம்

0
76

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாணக்கியன் இராசமாணிக்கம், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கடந்த காலத்தில் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டதாகவும் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள், திருடர்கள் பற்றி பேச முடியுமா என்னும் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கின்றார்.

சாணக்கியன் வயதிலும் அனுபவத்திலும் தமிழ் அரசியலில் மிகவும் சிறியவர். ஈழத் தமிழர் ஆயுதப் போராட்ட அரசியலின் சாட்சியாக இப்போதும் சிலர் இருக்கின்றனர். அவர்களிடம் கேட்டால் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் தமிழ் ஆயுத இயக்கங்கள் எவ்வாறு நிதியை திரட்டின என்பதை நினைவுபடுத்துவார்கள். வங்கிக் கொள்ளைகளில் ஈடுபடாத பிரதான இயக்கங்கள் எவையும் இல்லை.

நீர்வேலி வங்கிக் கொள்ளை அன்றைய காலத்தில் புகழ்பெற்ற வங்கிக் கொள்ளைகளில் ஒன்று. தமிழ் ஆயுத இயக்கங்களின் ஆரம்பகால வங்கிக் கொள்ளைகளை சிறிலங்கா அரசு, திருட்டு என்றே அடையாளப்படுத்தியது ஆனால் தமிழ் அரசியலில் சூழலில் அவற்றை எவருமே திருட்டு என்றோ, பெடியங்கள் திருட்டு நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள் என்றோ நோக்கியதில்லை – காரணம் அன்றைய சூழலில் ஆயுதப் போராட்டத்தின் ஓர் அங்கமாகவே அரசின் வளங்களை சூறையாடும் நடவடிக்கை நோக்கப்பட்டது.

பிற்காலங்களில் அவ்வாறான நடவடிக்கைகளில் இயக்கங்கள் ஈடுபடவில்லை. இந்திய – இலங்கை ஒப்பந்த காலத்தில் இயக்கங்களுக்குத் தேவையான நிதியை இந்தியா வழங்கியது. வரலாறு இவ்வாறிருக்கின்ற போது தென்னிலங்கையில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பியின் வங்கிக் கொள்ளையை திருட்டு என்று குறிப்பிடுவதானது, அரசியல் வரலாறு தொடர்பான அறிவற்ற செயலாகவே நோக்க வேண்டியிருக்கின்றது.

புதிதாக அரசியல் காற்றை சுவாசிப்பவர்கள் அந்தக் காலகட்ட வரலாறு பற்றி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தங்களுக்குத் தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அரசியல்ரீதியில் ஜே.வி.பி. தொடர்பில் விமர்சிப்பதற்கு விடயங்கள் இருந்தால் அது தொடர்பில் குறிப்பிடலாம். இனப்பிரச்னை தொடர்பில் அவர்களது நிலைப்பாட்டிலுள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டலாம், அவர்களது பொருளாதார திட்டங்களிலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டலாம் – அது அவசியமும் கூட, ஆனால் அவர்களது ஆயுதக் கிளர்ச்சியின்போது மேற்கொண்ட விடயங்கள் தொடர்பில் ஈழத் தமிழர் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் பேசுவது பொருத்தமானதல்ல – தவிர அது அரசியல் நாகரீகமும் அல்ல.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர்கள் என்போர் கட்சியில் புதிதாக இணைந்து கொண்டவர்களுக்கு அரசியல் வகுப்புகளை எடுக்க வேண்டியது அவசியமானது. ஏனெனில், ஜே.வி.பியின் கடந்தகால நடவடிக்கைகளை திருட்டு என்னும் ஒரு சொல்லால் அழைக்கும் போது, அது மறுபுறமாக அன்றைய காலத்தில் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்ட தமிழ் ஆயுத இயக்கங்களின் மீதும்தான் விரல்நீட்டும். இயக்க காலத்தின் நிதிசேகரிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பொது வெளிகளில் பேசினால் பெரும் சிக்கல்கள் ஏற்படும்.