பேரலைகள் போன்ற சவால்களை எல்லாம் முறியடித்த, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், பேரலைகளின் சக்தி எனும் தொனிப்பொருளில், சர்வதேச கடற்றொழிலாளர் தினம் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி என, பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் சமூகத்தை மேம்படுத்துவதற்கான, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய தொலைநோக்கிற்கு அமைவாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோரின் வழிநடத்தலில், சர்வதேச கடற்றொழிலாளர் தின நிகழ்வு, இன்று, பேருவளையில் இடம்பெற்றது.
‘பேரலையின் சக்தி’ எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் பிரதம விருந்தினராக, பிரதமர் தினேஸ் குணவர்த்தன பங்கேற்று உரையாற்றினார்.
நாடு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ள காலகட்டத்தில், சவால் மிக்க பொறுப்பை ஏற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த ஆகியோரின் செயற்பாடுகளை பாராட்டிய பிரதமர், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, கடற்றொழில் துறையிடம் இருந்து, கணிசமான பங்களிப்பை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
புதிய கடற்றொழில் காப்புறுதித் திட்டம், கடற்றொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம், ‘ஆழியின் அரும்புகள்’ சிறுவர் சேமிப்புத்திட்டம் போன்றவை ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், கடற்றொழில் குடும்பங்களில், சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற பிள்ளைகள் கௌரவிக்கப்பட்டு, புலமைப்பரிசில் வழங்கப்பட்டன.
அத்துடன், களுவாமோதர வாய்க்காலில், நன்னீர் மீன் குஞ்சுகள் விடுவித்தல், அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபடும் தொழில் முயற்சியாண்மையாளர்கள் 60 பேருக்கு, இரண்டாம் கட்ட நிதி உதவி, அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபடும் புதிய தொழில் முயற்சியாளர்கள் 4 பேருக்கு, தலா 2.5 இலட்சம் ரூபா நிதி உதவி போன்றவையும் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை, பேருவளை மருதானை கடற்றொழிலாளர் இறங்குதுறையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த இறங்குதுறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற, தூர்வாரல் செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பாக, சம்மந்தப்பட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுடனும், மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபன அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.