பொதுஜன பெரமுனவின் கொள்கையும் ரணிலும்

0
167

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடர் ஆரம்பித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை பலவீனமாக இருப்பதாக ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் உதவி ஆணையாளர் அறிவித்திருக்கின்றார்.
இந்த அறிவிப்புக்கு மத்தியில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, 46ஃ1 தீர்மானத்தை அரசாங்கம் நிராகரிப்பதாக அறிவித்திருக்கின்றார்.
அது இலங்கையின் இறைமையை மீறுகின்றது என்னும் மொட்டு – பீரிஸின் பழைய வாதத்தை அப்படியே அலி சப்ரி ஒப்புவித்திருக்கின்றார்.
இலங்கையின் பொறுப்புக் கூறலை வலியுறுத்தி பிரித்தானியாவால் கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட 46ஃ1 தீர்மானத்தை கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் நிராகரித்திருந்தது.
தற்போது கோட்டாபய ராஜபக்ஷவின் நிலைப்பாட்டையே ரணில் தலைமையிலான அரசாங்கமும் அறிவித்திருக்கின்றது.
உண்மையில் இது ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை நிலைப்பாடாக இருக்க முடியாது.
ஏனெனில், கடந்த ஆட்சிக் காலத்தில் ரணில் விக்கிரமசிங்க ஐ. நா. மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பயணிக்கும் கொள்கை நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.
அவ்வாறான நிலைப்பாட்டை எடுத்திருந்த ரணில் விக்கிரமசிங்க இப்போது அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க முடியாது.
அலி சப்ரியின் அறிவிப்பிலிருந்து ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது.
அதாவது, ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் பலவீனமாக இருப்பதால் அவர் விரும்பினால்கூட பல்வேறு விடயங்களை முன்னெடுக்க முடியாத நிலைமையிருக்கின்றது.
ஏனெனில், ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க உதவி நிறுவனத்தின் நிர்வாகியான சமந்தா பவருடனான சந்திப்பின்போது தெரிவித்திருந்த கருத்துக்களுக்கும் அலி சப்ரி தற்போது அறிவித்திருக்கும் நிலைப்பாட்டுக்கும் அடிப்படையிலேயே வேறுபாடுண்டு.
சமந்தா பவருடனான சந்திப்பின்போது பல முன்னேற்றகரமான விடயங்கள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.
ஆனால், அவற்றை அவர் முன்னெடுக்க வேண்டுமாயின் இன்னொரு முறை அதிகாரத்தில் இருக்க வேண்டும்.
2005 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்போதும் ரணிலிடம் நீண்ட கால நோக்கிலான பரந்த பொருளாதார திட்டமிருந்தது.
2003 தொடக்கம் 2006 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருந்த ஜெப்ரி லுன்ஸ்டட் தனது ஆய்வறிக்கை ஒன்றில் இதனைக் குறிப்பிட்டிருக்கின்றார்.
இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளுக்கு அனுசரணையாளராக இருந்த நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மும் இதனை குறிப்பிட்டிருக்கின்றார்.
ஆனாலும் மக்களின் ஆதரவின்மையால் ரணில் விக்கிரமசிங்கவால் அவரின் திட்டங்கள் எவற்றையுமே நடைமுறைப்படுத்த முடியவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில்தான் பொருளாதார நெருக்கடியின் விளைவாக தற்செயலாக அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் ரணில் பல்வேறு முன்னேற்றகரமான திட்டங்கள் தொடர்பில் பேசினாலும் கூட அவற்றை நடைமுறைப்படுத்த அவர் அதிகாரத்தில் இருக்க வேண்டும்.
இந்த நிலைமையை உற்று நோக்கும் போது எழும் கேள்வி – பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு ரணிலின் திட்டங்கள் அனைத்தையும் முன்னெடுக்க முடியுமா? நிச்சயம் முடியாது.
ரணிலின் திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமாயின் அவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியாக வரவேண்டும்.
அதேவேளை பாராளுமன்றமும் அவரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
அவ்வாறானதொரு நிலைமை உருவாகாதுவிட்டால் ரணிலால் நிச்சயம் முன்னேற்றங்களை நிரூபிக்க முடியாது.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பில் அலி சப்ரியின் அறிவிப்பே இதற்கு சிறந்த உதாரணமாகும்.
ரணிலின் கொள்கை நிலைப்பாட்டுக்கும் அவர் தலைமை தாங்கும் பாராளுமன்றத்தின் கொள்கை நிலைப்பாட்டுக்கும் இடையில் அடிப்படையிலேயே வேறுபாடுண்டு. இதுதான் தற்போதுள்ள அடிப்படையான பிரச்னை