பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதில் இலங்கை தவறியுள்ளது- வோல்கர் டர்க்

0
153

பொறுப்புக்கூறல்களை நிறைவேற்றுவதிலிருந்து இலங்கை தொடர்ந்தும் தவறிவருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

ஆணையாளர் வெளியிட்டுள்ள வருடாந்தர அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘போர்க்குற்றங்கள், அண்மைய மனித உரிமை மீறல்கள், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றின் மூலம் பொறுப்புக்கூறல்கள் மீறப்பட்டுள்ளமை நன்கு புலப்படுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடு முன்னோக்கிச் செல்வதற்கு இந்த விடயங்கள் பாரிய தடையாக இருப்பதாகவும் அது தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்படவேண்டுமெனவும் மனித உரிமைகள் ஆணையாளர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்களாகியும், அதனூடாக பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உண்மை, நீதி மற்றும் தீர்வு கிடைப்பதில்லை.
மாறாக அவர்கள் வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். அரசாங்கம் ஒரு புதிய உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை முன்மொழிந்துள்ளது.
இந்த நிலையில், எந்தவொரு நிலைமாறுகால நீதிச் செயல்முறையும் வெற்றியடைவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கான உண்மையான முயற்சிகளால் அடித்தளம் அமைக்கப்படவேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த பொறிமுறையின் ஊடாக உண்மையைத் தேடுவது மட்டுமன்றி பொறுப்புக்கூறலுக்கான தெளிவான அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு மாற்றத்தை செயற்படுத்துவதற்கான அரசியல் விருப்பத்துடன் இருக்கவேண்டும்’ என வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணைகள் மற்றும் வழக்குகளை துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.