ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்வதற்கு எதிராகத் தடை உத்தரவுகள் வருகின்றன என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராகவே தடை உத்தரவுகள் போடப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான திட்டமிடப்பட்ட போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது மக்களைத் தூண்டிவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இந்தப் போராட்டத்தை நடத்துவதாகத் தெரிவித்து பொலிஸார் தாக்கல் செய்த அறிக்கையின் பிரகாரம் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் போராட்டங்களை நடத்த நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இதுதொடர்பில் அறிவிப்புக்கள் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பதவி உயர்வுகளோ அல்லது பதவிகளோ கிடைப்பது போன்று தனக்கு நீதிமன்றத் தடை உத்தரவுகள் கிடைத்துக் கொண்டிருகின்றன என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
‘இன்று களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவினரால் எனக்கு மூன்றாம் திகதி முதல் ஆறாம் திகதி வரையிலான போராட்டத்தில் கலந்து கொள்வதனைத் தடை செய்யுமாறு களுவாஞ்சிக்கொடி பொலிஸாரால் நீதிமன்றங்களை நாடி பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவு என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதில் மிகவும் வேடிக்கையான விடயம் கொரோனாவைக் காரணம் காட்டி நீதிமன்றங்களை நாடியுள்ளனர்.
ஆனால் கொழும்பில் கிழக்கு முனைய துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு பொலிஸாரால் தடை உத்தரவு வழங்க முடியாது. ஏனென்றால் அது அரசாங்கத்துடன் தொடர்புடைய விடயம்.
கடந்த காலத்தில் அரசியல்வாதிகளுடைய விடுதலை குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானை விடுதலை செய்த போது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இணைந்து முன்னெடுத்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு பொலிஸாரால் எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை’- என்றார்.