கடந்த மாதம், போலி கடவுச்சீட்டில் இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்றபோது கைது செய்யப்பட்ட சீன பிரஜை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் பீஜிங்கிற்கு நாடு கடத்தப்படவுள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றத்திற்காக தேடப்படும் சீனப் பிரஜையை, சீனாவுக்கு நாடுகடத்துவதற்கு பாதுகாப்புப் பணியாளர்களுடன் தனி விமானம் ஒன்றை வழங்குமாறு சீனத் தூதரகத்திடம் கோரப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 18ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சீன பிரஜையின் நடத்தையை கருத்திற்கொண்டே இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்குள் பிரவேசிக்கும்போது, மேற்கு ஆபிரிக்காவில் உள்ள கினியாவின் போலி கடவுச்சீட்டு அவரிடம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தநிலையில், குறித்த சீன பிரஜை எதிர்வரும் புதன் அல்லது வியாழக்கிழமை நாடு கடத்தப்படுவார் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
அவரை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள தமது திணைக்களம் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
குறித்த சீன பிரஜை, தற்போது வெலிக்கடை இடைநிலை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.