மகாராஷ்டிராவின் ரெய்காட் மாவட்டத்தில் உள்ள இர்ஷல்வாடி கிராமத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 15 பேர் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிராவில் ரெய்காட் மாவட்டம், காலாபூர் வட்டத்தில் உள்ள இர்ஷல்வாடி என்ற கிராமத்தில் கனமழை காரணமாக நேற்றிரவு மண்சரிவு ஏற்பட்டது. இந்த திடீர் மண்சரிவில் சுமார் 100 பேர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தகவல் கிடைத்ததும் காவல் துறை, தீ அணைப்புத் துணை, தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இதுவரை 70 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலத்த காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் நவி மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவில்சிக்கி உயிரிழந்த நிலையில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 15 பேரின் உடல்கள் மண்சரிவில் சிக்கி இருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அங்கே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”ரெய்காட் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்டமண்சரிவு தொடர்பாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் பேசினேன். தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 4 குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. அவர்கள் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மக்களை பத்திரமாக மீட்பது மற்றும் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக வழங்குவது ஆகியவையே எங்களின் முதன்மையாக குறிக்கோள்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.