வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டனசர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் ஏற்பாட்டில் கவன ஈர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்திபூங்காவிலிருந்து ஆரம்பமான கவன ஈர்ப்பு பேரணி மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையம் ஊடாக தந்தை செல்வா சதுக்கம் வரையில் சென்றதுடன் அங்கு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.இந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் சர்வதேச நீதிவேண்டும், நீதிக்காக போராடுபவர்களை கைதுசெய்யாதே போன்ற கோசங்களை எழுப்பியதுடன் சர்வதேசமே இனப்படுகொலையாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து, போன்ற வாசகங்கள் பொறித்த பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அனுப்பிவைப்பதான மகஜர் வாசிக்கப்பட்டதுடன் வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளும் வெளியிடப்பட்டது.போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.