மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பழமைவாய்ந்த கத்தோலிக்க ஆலயமான மட்டக்களப்பு அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலயத்தின் 214ஆவது வருட திருவிழா இன்று இடம்பெற்ற திருவிழா திருப்பலியுடன் கொடியிறக்கப்பட்டு 2022ஆம் ஆண்டுக்கான ஆலய திருவிழா நிறைவுபெற்றது.கடந்த 09ஆம் திகதி பங்குத்தந்தை இக்னேசியஸ் ஜோசெப் அடிகளாரின் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழாவின் ஒன்பது தினங்கள் நவநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நேற்று மாலை அன்னையின் திருச்சொரூப பவனியும் தொடர்ந்து இன்று காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில் பிள்ளைகளுக்கான உறுதிபூசுதல் , நற்கருணை வழங்கப்பட்டு திருவிழா திருப்பலியுடன் ஆலய திருவிழா நிறைவுபெற்றது.
ஆலய திருவிழா திருப்பலியை தொடர்ந்து அன்னையின் திருச்சுரூப ஆசீருடன் ஆலய திருவிழா கொடியிறக்கப்பட்டு மட்டு வாவியில் அன்னையின் திருச்சுரூப பவனியும் இடம்பெற்றது.மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்து வருகை தந்த பெருமளவான மக்கள் ஆலயத்திருவிழா திருப்பலியில் கலந்துகொண்டதுடன் திருவிழாவில் கலந்துகொண்ட மக்களுக்கான அன்னதானமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .