மட்டு.வாவியில் சட்டவிரோத மீன்பிடி:மீனவ சங்கங்கள் குற்றச்சாட்டு

0
32

மட்டக்களப்பு வாவியில் சட்ட விரோத மீன்பிடி முறைகளால், மீன் இனங்கள் அழிந்து செல்வதை தடுப்பதற்கு
புதிய அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மீன்பிடி சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. மட்டக்களப்பு வாவியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்கள பிரதிப்பணிப்பாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இ.ஸ்ரீநாத் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் மாவட்ட கடற்தொழில் நீரியல்வள திணைக்கள ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு வாவியில் மீன்பிடியில் ஈடுபடும் பல்வேறு மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மட்டக்களப்பு முகத்துவாரத்தில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர் சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். வாவியில் நடைபெறும் சட்ட விரோத மீன்பிடி முறைமைகள் தொடர்பில் மீனவ சங்கங்களால் பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. தடைசெய்யப்பட்ட வலைகள் மட்டக்களப்பு வாவிக்குள் பயன்படுத்தப்படுவதன் காரணமாக மீன்கள் அழியும் நிலையேற்படுவதுடன் வாவியின் ஓரங்களில் காணப்படும் கண்டல் தாவரங்களும் அழிக்கப்படுவதனால் மீன் இனங்களின் உற்பத்திகள் தடுக்கப்படுவதாகவும் மீனவர்களினால் குறிப்பிடப்பட்டது.

எதிர்காலத்தில் மீனவர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் சட்ட விரோத மீன்பிடியை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீரியல்வள திணைக்கள பிரதிப்பணிப்பாளர்
குரூஸ் மீனவ அமைப்புகளிடம் தெரிவித்தார். மீன்பிடித்துறை அமைச்சரின் கவனத்திற்கு ஏற்கனவே இப்பிரச்சினையைக் கொண்டுசென்றுள்ளதாகவும் விரைவில் அமைச்சர் மாவட்டத்திற்கு வருகைதந்து மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இ.ஸ்ரீநாத் தெரிவித்திருந்தார். புதிய அரசாங்கம் மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கையெடுக்கும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நம்பிக்கைவெளியிட்டார்.