மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலவெட்டுவான் வீரக்கட்டு ஆற்றில் மண்அகழ்வில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கிரான் – கோரகல்லிமடு பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய கதிரேசு கங்கேஸ்வரன் என்பவரே உயிரிழந்தவர் என்று கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மயிலவெட்டுவான் வீரக்கட்டாற்றின் நடுவிலுள்ள மணல் திட்டில் மணல் அகழ்ந்து வள்ளத்தில் ஏற்றிவிட்டு கரையிலுள்ள மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த கயிற்றின் உதவியுடன் கரை திரும்பும்போது ஆற்றின் மிக ஆழமான பகுதியில் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சில மணி நேரத்தில் மீட்கப்பட்ட குறித்த நபர் மூச்சையிழந்து காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச்சென்று பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்தார்.

கரடியனாறு பொலிஸ் சார்ஜன்ட் ஏ.எம்.ஏ.நதீர் வாக்கு மூலங்களை பெற்றதை அடுத்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் உடல்கூற்று பரிசோதனை மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.