மன்னார் மாவட்டத்தில் நேற்று வரை பெய்து வந்த கடும் மழை காரணமாக ஆயிரத்து 898 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மூன்று இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் செல்வநகர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பொது மண்டபத்தில் 16 குடும்பங்களைச் சோர்ந்த 53 பேரும், எமில் நகர் பகுதியில் அன்னை தெரேசா பாடசாலையில் 43 குடும்பங்களைச் சார்ந்த 158 பேரும், ஓலைத்தொடுவாய் பகுதியில் 03 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் இடம்பெயர்ந்து பொது இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் மன்னாரில் பெய்த கனமழை காரணமாக மொத்தமாக ஆயிரத்து 608 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 883 பேர் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளனர்.
நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 290 குடும்பங்களைச் சார்ந்த ஆயிரத்து 390 பேர் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளனர்.
பாதிப்படைந்த மக்களுக்கு மன்னார் மாவட்ட செயலகம், அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர்கள் ஊடாக நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.