மலையக வரலாற்றில் முதன்முறையாக பிரமாண்ட தேசிய தைப்பொங்கல் விழா

0
110

மலையக வரலாற்றில் முதன்முறையாக மிகவும் பிரமாண்டமான முறையில் தேசிய தைப்பொங்கல் விழா மலையக மண்ணில் இம்முறை கொண்டாடப்படுகிறது. 

மக்களுக்காக அரசாங்க தரப்பால் நடத்தப்படும் இந்த நிகழ்விற்கு லங்காசிறி ஊடக அனுசரணை வழங்குகின்றமை சிறப்பம்சமாகும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் இந்த விழா நடைபெறுகிறது. 

ஹட்டன் டன்பார்க் மைதானத்தில் இன்று (21.01.2024) நடைபெறும் இந்த தேசிய தைப்பொங்கல் விழா, 1008 பொங்கல் பானை வைக்கப்பட்டு, தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுடன் வெகு விமர்சையாக இடம்பெறவுள்ளது.

அத்துடன், கோலப்போட்டி, தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பாட்டம் உட்பட பாரம்பரிய போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்புடன் நடைபெறும் விழாவில் பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளார்.

வெளிநாட்டு பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், மக்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதோடு தென்னிந்தியாவில் இருந்து கலைஞர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

மலையக வரலாற்றில் இம்முறையே 1008 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு, மிகவும் பிரமாண்டமான முறையில் தேசிய பொங்கல் விழா நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற மக்களுக்கான நிகழ்வுகளில் லங்காசிறி நிறுவனம் இனிவரும் காலங்களிலும் கைகோர்க்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.