மாங்குளத்தில் உயிருக்குப் போராடும் யானையை மீட்கும் பணியில் இராணுவத்தினர்

0
137

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட மணவாளன்பட்டமுறிப்பு கோணக்குளம் பகுதியில் யானை ஒன்று உயிருக்கு போராடும் நிலையில், அதனை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில வாரங்களாக குறித்த யானை அப்பகுதிகளில் நடமாடி வருவதாகவும், யானையின் கால் பகுதியில் காயங்கள் இருப்பதற்கான தடயங்கள் இருப்பதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அப் பகுதியின் குளக்கரை பகுதியில் காயமடைந்துள்ள யானை படுத்திருப்பதாகத் தெரிவித்த பொதுமக்கள், சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பல தடவைகள் அறிவித்தும் அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிடவில்லை என்றும் குறிப்பிட்டனர்.

வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையினை பாதுகாக்க தவறியுள்ளதாகத் தெரிவிக்கும் மக்கள், குறித்த யானை நீருக்குள் படுத்திருப்பதனால் நீரை வெளியேற்றும் செயற்பாடுகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அண்மையில் அதே பகுதிக்கு அருகாமையில் உள்ள மேளிவனம் பகுதியில் காயங்களுடன் உலவிய யானை ஒன்று உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.